கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகள் பங்கு பெற்று பயனடையலாம்.
கிராம ஊராட்சிகளில் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி பெற்று தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றிடவும், தரிசு நிலங்களை விளைநிலங்களாக சாகுபடிக்கு கொண்டு வரவும் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் உழவர் நலன் சார்ந்த பிற துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்திட கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு 2025-26-ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து குறைந்த பட்சம் 10 ஏக்கர் தரிசு நிலத்தை தொகுப்பாக ஏற்படுத்தி அத்தொகுப்பில் நீர் ஆதாரங்கள் மற்றும் நுண்ணீர் பாசனம் அமைத்து சாகுபடிக்கு கொண்டு வர இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தரிசாக உள்ள தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இருக்கும் முட்புதர்களை அகற்றி நிலத்தினை சமன் செய்து உழுவதற்கு எக்டர் ஒன்றுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.9600/- மானியம் வழங்கப்படுகிறது.
வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ஒரு எக்டருக்கு 5 கிலோ பயறு விதைகளுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.300/- மானியம் வழங்கப்படுகிறது.
நன்மை பயக்கும் நுண்ணுயிர்களை பெருக்கி மண்வளத்தினை மேம்படுத்துவதற்கான செயல் விளக்கத் திடல்கள் அமைத்திட எக்டர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.450/- வரை மானியமாக வழங்கப்படுகிறது.
விசைத்தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் 50 சதவீதம் மானியத்தில் அதிககட்சமாக ரூ.3000/- வரை மானியமாக வழங்கப்படுகிறது.
எனவே வேளாண் பெருமக்கள் நடப்பு 2025-26-ம் ஆண்டு கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply