நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் திட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் முதுகலை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (07.03.2025) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு ஃ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு பொறுப்பு வகிக்கும் முதுகலை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், 100 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வழிகாட்டி என்கிற வீதத்தில் ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு இருக்கும் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்தும், அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், பாடம் வாரியாக எடுக்க வேண்டிய மதிப்பெண்கள், உயர்கல்வியில் உள்ள துறைகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது முக்கியம். எடுத்த மதிப்பெண்களை வைத்து என்ன விதமான வாய்ப்புகளை பெறமுடியும் என்பது குறித்த தெளிவும், விழிப்புணர்வும் இருப்பது அதைவிட மிக முக்கியம்.
பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.குறிப்பாக உயர்கல்வியில் சேர விரும்பும் மாணவிகளுக்கு தமிழக அரசின் புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து, எடுத்துக்கூறி அத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் இடைநிற்றல் உள்ள மாணவர்களை கண்டறிவதில் முறையான புள்ளி விவரங்கள், இணையதளத்தில் வருகை பதிவு செய்வதனால் கிடைக்கப்பெறுவதன் மூலம், அதற்கான காரணங்களையும் கண்டறிந்து பள்ளி இடைநிற்றல் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு வருகின்றன. அதைபோல், கல்லூரிகளிலும் மாணவர்களின் இடைநிற்றல் குறித்த புள்ளி விவரங்கள் மற்றும் அதற்கான காரணங்களை கண்டறிந்து, முறையான தீர்வுகள் மூலம் அவர்கள் உயர்கல்வி தொடர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை அதிகப்படுத்தியதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அதைபோல் உயர்கல்வி வழிகாட்டுதல் மூலம் மாணவர்கள் சரியான வாய்ப்புகளை அடைவதற்கும் ஆசிரியர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் 167 பள்ளிகளைச் சேர்ந்த 182 முதுகலை ஆசிரியர்கள், 80 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளாகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply