சிவகாசி நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தை(PHC) பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் நாய்க்கடி தடுப்பூசி (ARV) இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்..
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தை (PHC) பார்வையிட்டு, அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் நாய்க்கடி தடுப்பூசி (ARV) இருப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நாரணாபுரம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 46 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.இதற்குரிய தடுப்பூசி உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் மார்ச் மாதத்தில் மட்டும் 1802 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.எனவே தெருநாய் தொல்லை உள்ள பகுதிகளிலும் தெருக்களில் நடந்து செல்லும் போதும், குழந்தைகள் தெருவில் விளையாடும் போதும் மிகுந்த எச்சரிக்கையோடும் கவனத்தோடும் இருக்க வேண்டியது அவசியம்.
நாய்கடி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடி தடுப்பு மருந்து இருப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.நாய்க்கடிக்கு எதிரான நடவடிக்கையை பலப்படுத்தும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், விலங்குகளின் இனப்பெருக்க கட்டுப்பாட்டுத் திட்டம் ((ABC) ) மற்றும் சாலைகளில் உள்ள நாய்களுக்கும், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பள்ளி விடுமுறைகளில் குழந்தைகள் வெளியே அதிகமாக விளையாடுவதால், பெற்றோர்கள் எச்சரிக்கை உணர்வுடன் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ARV தடுப்பூசி கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவத்துறையினர் தாமதமின்றி சிகிச்சை அளிக்க,தவறாமல் (SOP-I) நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், மருத்துவத்துறை ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாய்கடிக்கு உடனடியாக சிகிச்சை பெறுவது மிக முக்கியம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நாய் கடிக்கு ஆளானவர்கள் எந்த தயக்கமும் இன்றி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.மேலும், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் விரிவான கூட்டம் நடத்தப்பட்டு, சட்டத்திற்குட்பட்ட வழிமுறைகளின்படி நாய்களால் ஏற்படும் தொந்தரவுகளை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply