சிவகாசி எஸ்.எப்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.எப்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (07.02.2025) தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.
மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.
ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் அனுபவங்கள் தான் சிறந்த ஆசிரியர். மற்றவர்களின் சரியான அனுபவங்களை அவர்கள் கடந்து வந்த பாதைகளை நாம் நன்கு கற்றுகொள்ள வேண்டும்.மிக புகழ்பெற்ற தத்துவஞானி மனிதன் என்பவன் தன்னால் செய்ய முடியாமல் போன, தன்னால் தவற விடப்பட்ட வாய்ப்புகளை நினைத்து உருகும் ஒரு குற்ற உணர்ச்சியின் தொகுப்பு என்று குறிப்பிடுகிறனர். அப்படிப்பட்ட அனுபவங்களை நீங்கள் ஒருபோதும் தவற விடக்கூடாது. உங்களுக்கு என்ன விதமான வாய்ப்புகள் இருக்கின்றன. என்ன விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள் என்பதை பற்றி சொல்லப்படக்கூடியது தான் இந்த நிகழ்ச்சி.
அடுத்தவர்களின் அனுபவங்களில் இருந்து தனக்கான பாடத்தை கற்றுக்கொள்வது தான் மிக முக்கியமானது. இரண்டு வகையில் ஒருவருக்கு துன்பம் வரும். நமக்கு நாமே உருவாக்கி கொள்ளக்கூடிய துன்பம். இதை தான் இலக்கியத்தில் தீதும் நன்றும் பிறர் தர வாரா. நமக்கு வரக்கூடிய இன்பமும், துன்பமும் மற்றவர்களால் வராது. நாமே உருவாக்கி கொள்கிறோம். மற்றொன்று மற்றவர்களால் ஏற்படக்கூடிய துன்பம். இந்த இரண்டில் இருந்தும் நம்மை பாதுகாத்து கொள்வதற்கு அறிவு தான் மிக முக்கியமானது.
இந்த கால கட்டத்தில் கற்றலில் 15 விழுக்காடு மட்டும் தான் நீங்கள் படிப்பது, தேர்வு எழுதுவது, மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது. மீதமுள்ள 85 விழுக்காடு வாழ்க்கைக்கு தேவையான கற்றல். இந்த கால கட்டத்தில் தான் நீங்கள் நல்ல நட்பை, உறவை உருவாக்கி கொள்ளகூடியது மிகவும் அவசியம். எதையெல்லாம் செய்யவேண்டும், செய்யக்கூடாது எனவும், நாம் அறிவை முதன்மைப்படுத்தி, உணர்ச்சியை இரண்டாம் நிலைப்படுத்தி செயல்படுத்துவது குறித்த பக்குவத்தை பெறக்கூடிய காலக்கட்டம்.
யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.நான் சிறப்பாக இருக்கிறேன். அல்லது நான் எப்படி என்னை வெளிப்படுத்தி கொள்கிறேன் என்பதை குறித்து நேர்மறையான, எதிர்மறையான செய்திகளை, விமர்சனங்களை, நன்மைகளை நாம் கவனமாக புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு என்னென்ன பிரச்சினைகளை நாம் நினைத்துக்கொள்கிறோமோ, அல்லது உண்மையாகவே இருக்கின்றதோ அதே பிரச்சினைகள் தான் எல்லோருக்கும் வேறு வேறு வழிகளில் இருக்கும். எனவே, இந்த பிரச்சினைகள், இயலாமையோ அல்லது நமக்குண்டான வாய்ப்புகளோ ஒருபோதும் நமக்கான வெற்றியையோ, எதிர்காலத்தையோ தீர்மானிப்பதில்லை.நீங்கள் அனைவரும் எல்லாவற்றிலும் கவனத்தோடு இருக்க வேண்டும் ஒவ்வொரு தவறுகளில் இருந்தும் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டும். தவறை தைரியமாக ஒத்துக் கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும். நான் தவறு செய்து விட்டேன் என ஒத்துக் கொள்வதற்கு மிகப்பெரிய தைரியமும், அறிவும் வேண்டும்.
இந்தக் கால கட்டத்தில் உங்களுக்கு நேரமும் வாய்ப்பும் அதிகமாக இருக்கும். அவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், அரசினுடைய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம். ஏனென்றால், திறமையை விட, கல்வியை விட, உழைப்பை விட என மற்ற எல்லாவற்றையும் விட ஒரு பெண்ணை வெற்றியாளராக மாற்றுவதற்கு விழிப்புணர்வு தான் மிகவும் அவசியம். எனவே, நீங்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற்ற மாணவிகளாக உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply