குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க அனைத்து வகை சங்கங்களும் மற்றும் பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
. தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக 2025ம் ஆண்டிற்குள் மாற்ற வேண்டும் என்ற இலக்கினை செயல்படுத்தும் வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்/தலைவர், மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்புப் படை அறிவுரையின் படி விருதுநகர் மாவட்டத்தில் தடுப்புப் படையால் கூட்டாய்வுகளும் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுதுறை அலுவலர்களிடையே விழிப்புணர்வும் ஏற்படத்தப்பட்டு வருகின்றன.
தற்போது பள்ளி தேர்வுகள் முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
1. மாவட்ட தடுப்பு படை கூட்டாய்வின் போது விடுமறை நாட்களில் 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவ தொழிலாளர்களை பணிக்கமர்த்தியது கண்டறியப்பட்டால் பணிக்கமர்த்திய நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்படி மாணவ/மாணவியர் பள்ளியில் பயில்வதாகவும் பள்ளிவிடுமுறை நாட்களில் மட்டுமே பணிபுரிவதாக தெரிவித்தாலும் பணிக்கமர்த்திய நிறுவனம் மீது குற்றத்திற்கேற்ப முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதிகபட்சம் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 2வருடம் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
2. 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவ தொழிலாளர்களை பணிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
3. விளம்பரங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள், வர்த்தக ரீதியிலான கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் You tube, Facebook, Twitter, Instagram போன்ற வலைதள சமூக ஊடகங்களிலும் 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவத்தினரை ஈடுபடுத்தும்போது குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி சான்று வாங்கிய பின்னரே ஈடுபடுத்த வேண்டும் என உள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் 18 வயது நிறைவடையாத குழந்தை மற்றும் வளரிளம்பருவத்தினரை ஈடுபடுத்தும் நபருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடை செய்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாகும். 18 வயதிற்குட்பட்ட எவரும் பள்ளி அல்லது திறன் வளர் பயிற்சி பயிலாமல் பணிக்கமர்த்தப்பட்டிருந்தாலும் பள்ளி படிப்பினை தொடர்ந்து கொண்டே பணிபுரிந்து கொண்டிருந்தாலும் அது குறித்து 1098 சைல்டு லைன் உதவி எண் அல்லது pencil.gov.in என்ற வலைதளத்தில் புகார்கள் தெரிவிக்கலாம்.
அனைத்து பள்ளிவயது குழந்தைகளும் பள்ளி செல்வதை உறுதி செய்யவும், குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கவும் பொதுமக்களும், அனைத்து வணிகர்களும், வர்த்தகர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து வகை சங்கங்களும் மற்றும் பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அவர்கள் தெரிவித்துள்ளார்
0
Leave a Reply