வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான கால அட்டவணையை அறிவித்தவுடனே அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
இந்திய தேர்தல் ஆணையம் தற்போது நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கென ‘சிறப்புத் தீவிரத் திருத்த” (Special Intensive Revision – SIR) பணிகளை மேற்கொள்ள உத்தேசித்து இதற்கான தயார்நிலையை மதிப்பிடுவதற்காக அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளின் மாநாட்டை கடந்த 10.09.2025 அன்று புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் (IIIDEM) இந்திய தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது.
இம் மாநாட்டில் ‘சிறப்புத் தீவிரத் திருத்த” பணிகளை மேற்கொள்வதற்கான அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தயார்நிலையை ஆணையம் மதிப்பீடு செய்தது. பீகார் மாநிலத்தில் நடைபெற்றுவரும் ‘சிறப்புத் தீவிரத் திருத்த” பணிகளில் பின்பற்றப்பட்ட உத்திகள், கட்டுப்பாடுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் குறித்த விளக்கக்காட்சி பீகார் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்டது.
ஒவ்வொரு மாநிலத்திலும், இதற்கு முன்னர் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட தேதி மற்றும் அத்திருத்தத்தின்படி வெளியிடப்பட்ட பட்டியலில் இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, அச்சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்குப் பின்னர் வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் பதிவேற்றுவது குறித்த நிலையையும் அனைத்து மாநில/யூனியன் பிரதேச தலைமைத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், தற்போது பட்டியலில் உள்ள வாக்காளர்களை, கடைசியாக மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் போது இருந்த வாக்காளர்களுடன் இணைப்பதற்கான நிலையையும் அவர்கள் வழங்கினர்.
எந்தவொரு வாக்குச்சாவடியிலும் 1,200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் நிலையும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருப்பதையும், மேலும், அதில் தகுதியற்ற எந்தவொரு நபரும் சேர்க்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், தகுதியுள்ள குடிமகன் எவரும் எளிதாக சமர்ப்பிக்கும் வகையில் ஆவணங்கள் அமைந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான அனைத்துப் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 100 வயதைக் கடந்த வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்த்தல், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் பெறப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் உள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை உறுதி செய்யும் பணி மற்றும் அவர்களது மாற்றுத்திறன் குறித்த விபரத்தைப் பதிவு செய்யும் பணி ஆகியவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்புச் செய்யும் பொருட்டு அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர்களும் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கான கால அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் அப்பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply