நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிப் பயணம்- 2025 செல்லும் பேருந்துகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் (08.09.2025) பள்ளிக்கல்வித்துறை சார்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அருகிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பார்வையிடும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்லூரிப் பயணம்- 2025 செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்படி, விருதுநகர் மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கான வழிகாட்டல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், தேர்ச்சிபெற்று அடுத்த கல்வியாண்டில் 100 சதவீதம் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதை ஊக்குவிப்பதற்காக களப்பயணம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 41 அரசுப்பள்ளிகளில் பயிலும் 2,287 மாணவ, மாணவிகள் அவரவர்கள் பள்ளிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்று உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதன்படி, விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 43 மாணவிகளுடன் களப்பயணம் சென்ற பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.இந்த பயணத்தின் போது, கல்லூரிகளில் உள்ள பாடப் பிரிவுகள், அடிப்படை கட்டமைப்புகள், வசதிகள், படித்து முடிக்கும் போது கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இந்த பயணம் எங்களுக்கு ஒரு ஆர்வத்தையும், உயர்கல்வி குறித்த புரிதலையும் அளித்ததோடு, உயர்கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும் அறிந்து கொண்டோம். இதன் மூலம் உயர்கல்விக்கு நாங்கள் முன்கூட்டியே எங்களை தயார் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது எனவும், இதற்காக தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை பள்ளி மாணவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.
பின்னர், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்தும், மாணவிகளுடன் கலந்துரையாடி கற்றல் திறன் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.மதன்குமார், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply