தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவின் மதி சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (16.12.2025) தமிழ்நாடு மாநில ஊரக/நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவிக்குழுவின் மதி சிறுதானிய உணவகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா. I AS., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, விருதுநகர் மாவட்டத்தில், பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், கல்வி ஆகியவற்றிற்காக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திடவும், வேளாண்மையில் முதன்மையாக விளங்கக்கூடிய சிறு தானிய விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுடன் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
மேலும், மகளிர் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக பல முன்னெடுப்புகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மதி சிறுதானிய உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த உணவகத்தில் ராகி, தினை, சோளம், வரகு, குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதன்மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிலையான வருவாய் கிடைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கவும் உறுதுணையாக இருக்கும். மேலும், மாணவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியமான, ஊட்டச்சத்துகள் மிக்க உணவாகவும் அமைகிறது. எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் சிறுதானிய உணவகத்தைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இஃர்பான், இ.ஆ.ப., உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply