தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் (26.01.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீ குமார் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தியாகி சங்கரலிங்கனார், தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று போராடி, உண்ணாவிரதம் மேற்கொண்டு தனது இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல் ஆவார். இவர் 1895ஆம் ஆண்டு, பெரிய கருப்பசாமி நாடார் வள்ளியம்மை தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார். 1914ஆம் ஆண்டு, பெண்கல்வி வளர்ச்சிக்கான சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்தார். 1915ஆம் ஆண்டு திருமணம் புரிந்த இவர் 1917ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1920ஆம் ஆண்டு இராஜாஜியை சந்தித்தபோது அவரது சீடரானார். இவர், “மாதர்கடமை” என்னும் நூலை எழுத்p வெளியிட்டார். கதர் இயக்கத்தில் சேர்ந்து, கதர் வளர்ச்சிப்பணியை மேற்கொண்டார்.
திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாத சிறைத் தண்டனைப் பெற்றார். கரூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக இவருக்கு 6 மாத கடுங்காவல் தண்டனையும் 5 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தேசசேவையின் காரணமாக 1944ஆம் ஆண்டு மாதம் ரூ.150/- ஊதியத்திலிருந்த வேலையை விட்டு விட்டு திருச்செங்கோட்டிலிருந்த காந்தி ஆசிரமத்தில் ரூ.30/- சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 1951 ஆம் ஆண்டு விருதுநகரில் உள்ள சூலக்கரையில் ஓர் ஆசிரமம் அமைத்து செயல்பட்டார்.இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்த போது, அப்பெயரை மாற்றித் தமிழ்நாடு என பெயரிட வேண்டும் எனக் கோரி 27.07.1956 நாள் முதல் 13.10.1956 முடிய 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். 10.10.1956 அன்று மதுரையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
திருவாளர்கள் கு.காமராஜர், பி.கக்கன், ம.பொ.சிவஞானம், சி.என்.அண்ணாதுரை, ஜீவானந்தம் ஆகியோர் இவரைச் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரினர். ஆனால், இந்திய வரலாற்றிலேயே தாம் மேற்கொண்ட கொள்கைக்காக காந்தி வழியில் அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகச் செம்மல் தியாகி சங்கரலிங்கனார், தமிழ்நாட்டு வரலாற்றில் தியாக தீபமாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறார்.தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.77 இலட்சம் செலவில் மணிமண்டபம் 18.06.2015 அன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும், விருதுநகர் மாவட்டத்தில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் பிறந்த நாளான ஜனவரி 26 மற்றும் நினைவு நாளான அக்டோபர் 13 - ஆம் நாளன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் (26.01.2025) செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் 130-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னாரது சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், செயற்பொறியாளர்(பொதுப்பணித்துறை) திரு.செந்தூர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (மு.கூ.பொ) திரு.ச.தங்கவேல், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் திரு.மாதவன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், வட்டாட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply