உணவு மூலமாக தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க ஏதுவாக மதவழிப்பாட்டுத்தளங்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் நடத்தப்படும் அன்னதானத்திற்கு உணவுபாதுகாப்புத் துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
சமீபகாலங்களில் நடைபெறும் அன்னதானத்தில் உணவருந்தும் மக்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுதல் மற்றும் உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய்பரவுதல் ஆகியவை பரவலாகக் காணப்படுவதாக ஊடகங்கள் வழியாக அறியப்படுகின்றது. உணவு ஒவ்வாமை தவிர்த்து, உணவு மூலம் பரவக்கூடிய தொற்று நோயானது பெரும்பாலும் உணவு சமைக்கப் பயன்படும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்கு வழங்கப்பயன்படும் தண்ணீர் ஆகியவற்றால் தான் ஏற்படுகின்றது.எனவே, அன்ன தானங்களின் மூலம் உணவு மூலம் பரவக்கூடிய தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதவழிப்பாட்டுத்தளங்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் நடத்தப்படும் அன்னதானத்திற்கு உணவு பாதுகாப்புத் துறையிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 07.06.2025 மற்றும் 09.06.2025 அன்று நரிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கல்விமடை என்ற கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற அன்னதானத்தில் சாப்பிட்டவர்களில் சுமார் 150 பக்தர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இவ்விவகாரத்தை ஆய்வுசெய்து விசாரித்த உணவு பாதுகாப்புத் துறையினர், அன்னதானம் நடத்த உணவுபாதுகாப்புத் துறையின் முன்னனுமதி பெறவில்லை என்பதும், ஆழ்துளைகிணறு மூலம் பெறப்பட்ட சுத்திகரிக்கப்படாத மற்றும் குளோரின் கலக்காத தண்ணீரை சமையலுக்கும், நுகர்வோர்கள் அருந்துவதற்கும் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது.
எனவே, பிரச்சினைக்குரிய ஆழ்துளை கிணற்றிலிருந்து தண்ணீர் மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அந்தத் தண்ணீரில் வயிற்றுப போக்கினை ஏற்படுத்தும் கிருமி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறு வதைதடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பின்பற்றிட வேண்டும் எனஅறிவிக்கப்படுகின்றது.
1. அன்னதானங்களை ஏற்பாடு செய்பவர்கள், அன்னதானம் நடப்பதற்கு குறைந்தபட்சம் 10 தினங்களுக்கு முன்னரே https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவுபாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் பெறவேண்டும்.
2. அதுபோல், அன்னதானத்தில் சமைப்பவர்கள்/ கேட்டரிங்க் ஏஜென்ஸி ஆகியோரும், மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/ உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/ உரிமம் பெற்ற கேட்டரிங்க் / சமையல் குழுவினருக்கு மட்டுமே அன்னதானத்தில் உணவு சமைக்க அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பணி உத்திரவு வழங்க வேண்டும்.
3. இந்தப் பதிவுச் சான்றிதழ் போக, புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் முதல் தளத்தின் அறை எண்: 116 ரூ 118-ல் உள்ள நியமனஅலுவலர் அலுவலகத்தில், பின்வரும் விபரங்களுடன் அனுமதி கோரிகடிதம் ஒன்றினை, அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள்அன்னதானம் நடப்பதற்கு 7 தினங்களுக்குமுன்னர்சமர்ப்பிக்கவேண்டும்.
அன்னதானம் ஏற்பாடுசெய்பவர்களின் தொடர் முகவரிமற்றும் அலைபேசி.
அன்னதானம் நடைபெறும் இடத்தின் முழு முகவரி.
அன்னதானத்தில் ஈடுபடவுள்ள சமைப்பவர் குழு / கேட்டரிங்க் குழுவின் விபரம்.
அன்னதானத்தில் உணவு சமைக்கவும், நுகர்வோர் அருந்தவும் பயன்படுத்தவுள்ள குடிநீரின் ஆதாரநிலை, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீராக இருந்தால், விநியோகஸ்தர் / உற்பத்தியாளர் விபரம்.
கிணறு அல்லது ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துசமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் அனுமதி மற்றும் தண்ணீர் பகுப்பாய்வறிக்கை ஊராட்சி/ நகராட்சி/ மாநகராட்சி போன்ற உள்ளாட்சியின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அது குறித்தான அன்னதானம் ஏற்பாடு செய்பவரின் உறுதி மொழி மட்டும் போதுமானது.
சமைப்பவர் குழு / கேட்டரிங்க் குழுவினர் தொற்று நோய்த் தாக்கமற்றவர்கள் என்பதிற்கான மருத்துவச்சான்று.
உணவுசமைக்கத் தேவைப்படும் பொட்டல மிடப்பட்ட மூல உணவுப் பொருட்களை முழுமையான லேபிள் விபரங்கள் உள்ளதாக கொள்முதல் செய்யவும், அனைத்து மூல உணவுப் பொருட்களையும் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் / உரிமம் பெற்ற வணிகரிடத்தில் மட்டும் கொள்முதல் செய்யவும் சுய உறுதிமொழிச் சான்று.
உணவு தயாரித்த 2 ½ மணி நேரத்திற்குள் பரிமாறிவிட வேண்டும். மீதமான உணவைப் பரிமாறாமல் அப்புறப்படுத்திடல் வேண்டும்.
பால், மீன், இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதனை முறையான வெப்பநிலையில் பராமரித்திடல் வேண்டும்.
அனைத்துவகையான சமைத்த உணவிலிருந்தும் சராசரியாக 250 கிராம் உணவுமாதிரி எடுத்து, தூய்மையான பாட்டிலில் அடைத்து, குளிர்சாதனப் பெட்டியில் 48 மணிநேரத்திற்குப் பாதுகாத்திடல் வேண்டும்.
மேற்கூறிய, நிபந்தனைகளைப் பின்பற்றாமல் அன்னதானம் நடைபெற்று, அதன் மூலம் உணவின் மூலம் பரவக்கூடிய தொற்று நோய்த்தாக்கம் ஏற்பட்டால், அதற்கு அன்னதானம் ஏற்பாட்டாளர்களே முழு பொறுப்பாவார்கள் என்றும், அவர்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம், 2006-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
எனவே, அனைத்து மத வழிபாட்டுத்தளங்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள், உணவு பாதுகாப்புபதிவுச் சான்றிதழ் பெற்றும், உணவு பாதுகாப்புத் துறையிடம் அன்னதானம் நடக்கும் நாளிற்கு 7 தினங்களுக்கு முன்னரேமுன் அனுமதி விண்ணப்பம் சமர்ப்பித்து, முன் அனுமதி பெற்றும், உணவுபாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றியும், பக்தர்களுக்குபாதுகாப்பானஉணவுவழங்கிடஒத்துழைப்புநல்கவேண்டும்மெனமாவட்டஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply