தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண்,சே.ச அவர்கள் தலைமையில், மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.07.2025) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண்,சே.ச அவர்கள் தலைமையில், மாவட்ட சிறுபான்மையினர் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் என்பது, ஒரு மாநிலத்தின் சிறுபான்மை சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்படும் ஒரு அரசு அமைப்பு. இந்த ஆணையம் சிறுபான்மையினரின் குறைகளை விசாரித்து, தீர்வுகள் காணவும், அரசுக்கு ஆலோசனைகளையும் வழங்கும். சிறுபான்மை சமூகங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு, சுகாதாரத் திட்டங்கள் போன்றவற்றுக்கான திட்டங்களை அரசுக்கு பரிந்துரைத்தல், சிறுபான்மை சமூகங்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தல், சிறுபான்மை சமூகங்களின் மீதான வன்முறை, பாகுபாடு போன்ற குற்றங்களை விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தருதல், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல், சிறுபான்மை சமூகங்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவை இந்த ஆணையத்தின் செயல்பாடாகும்.
தமிழ்நாடு அளவில் உள்ள சிறுபான்மையினர் மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள கிறித்துவர்களுக்கான கல்லறை தோட்டங்கள், முஸ்லிம்களுக்கான கபர்ஸ்தான் இல்லாத இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு, கல்லறைத் தோட்டம், கபர்ஸ்தான் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் பள்ளிகளுக்கான அனுமதி மற்றும் அங்கீகாரம் குறித்தும், தனி நபர் கோரிக்கையான நலத்திட்டம், வங்கி கடன் பெறுவதல் உள்ளிட்டவைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து இங்கு எழுப்பப்பட்ட 70 சதவீத பிரச்சனைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகியோர் அங்கேயே தொடர்புடைய அரசு அலுவலர்களிடம் கலந்துரையாடி, தெளிவாக பிரச்சினைகளை தீர்வு காண்பதற்கு வழிவகை செய்து கொடுத்தார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் சிறுபான்மையினர்களுடைய கோரிக்கைகளை கேட்டு அவர்களுக்கு தீர்வு காணும் செயல்பாட்டில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் முழுநிறைவு பெற்றுள்ளோம்.
இந்த ஆணையம் கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள், சௌராஷ்டிரர்கள், சமணர்கள் இது மட்டுமல்லாது மொழிவாரியான சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது இந்த ஆணையத்தின் பொறுப்பாகும். சிறுபான்மையினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர்களிடையே கலந்துரையாடல் மேற்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மற்றும் அரசு சார்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து பரிந்துரை மேற்கொள்ளுவது இந்த ஆணையமாகும். மேலும் 38 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர், இந்த ஆணையம் சார்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான பரிந்துரைகளை இந்த ஆணையம் வழங்கும். இந்த ஆணையத்தில் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கம், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம்,கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றம் புனரமைத்தல், கிறித்துவர்களின் பயனிபாட்டிற்காக கல்லறைத்தோட்டம் மற்றும் முஸ்லீம்களின் பயன்பாட்டிற்காக கபர்ஸ்தான் அமைத்தல், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ), சிறுபான்மையினருக்கு மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினரின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, அரசு சார்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பாக தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது..
0
Leave a Reply