இழந்ததை மீட்க...உஜ்ஜயினி கால பைரவர்.
மத்தியபிரதேசம் உஜ்ஜயினி நகரில் கால பைரவர் கோயில் உள்ளது. ஷிப்ரா நதிக்கரையில் உள்ள இக்கோயிலில் சுவாமியின் தலை மட்டும் பெரியளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவரை தரிசித்தால் இழந்ததை மீட்கலாம்.
அந்தகன் என்னும் அசுரன் தீயின் நடுவே நின்று, தவம் செய்து சிவனிடம் வரங்களை பெற்றான். அதனால் ஆணவம் கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்தான். சிவனிடம் முறையிட்டனர் தேவர்கள். அசுரனை அழிக்க அவர் முடிவெடுத்தார். காலபைரவரை உருவாக்கி அவனைக் கொன்றார். மகிழ்ச்சியடைந்த தேவர்கள் கால பைரவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த வரலாற்றின் அடிப்படையில் இப்பகுதியை சேர்ந்த மன்னர் பத்ராசென் என்பவர் காலபைரவர் கோயிலை கட்டினார்.
மால்வா கட்டடக்கலை பாணியில் கோட்டை அமைப்பில் கோயில் உள்ளது. கருவறையில் சுவாமியின் உருண்டை வடிவத் தலையில் கண்கள், மூக்கு, வாய் மட்டுமே உள்ளன. காபாலிகா, அகோரி வழிபாட்டு முறைப்படி தாந்திரீக பூஜை நடக்கிறது. பூஜையில் பூமாலை, கருப்புக்கயிறு, ஊதுபத்தி, சூடம், மதுபானம் இடம் பெறுகிறது. விநாயகர், மகாவிஷ்ணு, தேவியின் சிற்பங்கள் பாறையைக் குடைந்து வடிக்கப்பட்டுள்ளன.
பைரவர் சன்னதியின் அருகிலுள்ள ஆலமரத்தடியில் சிவலிங்கமும், எதிரில் நந்தியும் உள்ளன. கருவறைக்கு வலது புறத்தில் பாதாள பைரவி சன்னதி உள்ளது. தரை மட்டத்திற்குக் கீழே இரண்டடி சதுர வடிவ நுழைவு வாயிலில் தவழ்ந்து சென்றே அம்மனை தரிசிக்க வேண்டும்.
கருவறையின் எதிரில் கூம்பு வடிவத்தில் தீபத்துாண் உள்ளது. நீண்ட ஜடாமுடியும், உடல் எங்கும் திருநீறு பூசிய சாதுக்கள் கோயிலுக்கு வெளியே தங்கியுள்ளனர். இங்கு தலவிருட்சம் ஆலமரம். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் எதிரி தொல்லை மறையும். நீண்ட கால நோயும் விலகும்.
இழந்தவை மீண்டும் கிடைக்கும். வாகனப் பயணம் சுகமாக அமைய முந்திரி மாலை அணிவிக்கின்றனர். காலபைரவரின் வாகனமான நாய் சிலை வாசலில் உள்ளது. விருப்பம் நிறைவேற சனிக்கிழமைகளில் இங்குள்ள நாய்களுக்கு பிஸ்கட் அளிக்கின்றனர். ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவர் அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
0
Leave a Reply