அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) தொழில் புரிய மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்
தமிழ் அரசு 2025 ஆம் ஆண்டு முதல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (SC/ST) தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம் (ANNAL AMBEDKAR BUSINESS CHAMPIONS SHCEMES (AABCS)) என்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்கள் (SC/ST) தொழில் தொடங்கும் ஆரம்ப அமைவு கட்டத்தில் எதிர்கொள்ளும் நிதிச்சுமையை தணிப்பது மற்றும் தேவையான வளங்களைப் பெறுவதை எளிதாக்குவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். மேலும் தொழில் முனைவோர்களின் ஒட்டுமொத்த செலவை கணிசமாக குறைத்து தொழில் முனைவோர்கள் தங்கள் வணிகத்தில் ஆர்வமுடன் முதலீடு செய்வதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.
இத்திட்டத்தில் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கான கடனுக்கு 35 சதவீத மூலதன மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் வழங்க வழிவகை செய்யப்பட்டள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ள இத்திட்டத்தில் வழிவகை இல்லை.
இத்திட்டத்தில் புதிய தொழில் ஆரம்பிக்கவும் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் தொழில்களின் விரிவாக்கத்திற்கும் மானிய கடனுதவி வழங்கப்படும். வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு இயந்திரங்கள், நிலம், சோதனைக்கருவிகள், மற்றும் கணிணி சார்ந்த பொருட்கள் வாங்கவும் இத்திட்டத்தில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். இதுவரை இத்திட்டத்தில் 69 பயனாளிகளுக்கு ரூ.458.37 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
மேற்காணும் திட்டத்தில் பயன்பெற திட்ட அறிக்கை, விலைப்பட்டியல் மற்றும் உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பித்து பயனடையுமாறு விருதநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பொது மேலாளர் அலுவலகம் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது 89255-34036 என்ற தொலைபேசியிலோ கூடுதல் விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply