தேசிய தடகள சாம்பியன்ஷிப்: தமிழகத்திற்கு மேலும் 2 தங்கம்; ஆசிய போட்டிக்கு கவுதமி, பரனிகா தகுதி.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில், 65-வது மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
ஆண்களுக்கான 21.098 கி.மீ. பாதி மாரத்தான் (நடை பந்தயம்) போட்டியில், தமிழக வீரர் செர்வின் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 31:49.00 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
அதேபோல், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீராங்கனை கவுதமி 2:04.17 நிமிடங்களில் இலக்கை எட்டி தங்கப்பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும் அவர் தகுதி பெற்றுள்ளார்.
பெண்களுக்கான போல் வால்ட் (Pole Vault) போட்டியில் தமிழகத்தின் பரனிகா 4.20 மீட்டர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார். இப்போட்டியில் 4.25 மீட்டர் தாண்டிய கர்நாடகாவின் சிந்துஸ்ரீ தங்கமும், 4.10 மீட்டர் தாண்டிய மத்திய பிரதேசத்தின் நிதிகா வெண்கலமும் பெற்றனர்.
ஆசிய போட்டிக்குத் தகுதி: போல் வால்ட் போட்டியில் 4.10 மீட்டருக்கும் அதிகமாகத் தாண்டியதால் சிந்துஸ்ரீ, பரனிகா, நிதிகா ஆகிய மூவருமே ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, இந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாடு அணி 4 தங்கம், 4 வெள்ளி என மொத்தம் 8 பதக்கங்களை வென்று வலுவான நிலையில் உள்ளது.
0
Leave a Reply