எங்கள் குலதெய்வம் சுந்தராட்சி அம்மன்.
இஷ்ட தெய்வங்கள் பல இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம் இருக்கும். அப்படிப்பட்ட குலதெய்வமான சுந்தராட்சி அம்மனை அனைவரும் 'எங்க குலதெய்வம்' எனக் கொண்டாடுகின்றனர். துாத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரத்தில் இந்த கோயில் உள்ளது.
சோழ மன்னரான கரிகாலன் குழந்தைப்பேறு இல்லாமல் தவித்தார். காசி முதல் கன்னியாகுமரி வரை புனித யாத்திரை மேற்கொண்டார். அதில் திருச்செந்துார் முருகனை தரிசித்து விட்டு திரும்பும் வழியில் சம்முகன், கருமுகன் என்ற இரண்டு நாய்கள் எதிரே வந்தன. இரண்டும் முயல் ஒன்றை பிடிக்க ஓடின. ஆனால் முயலோ அந்த நாய்களை கடித்து விட்டு புதர் ஒன்றில் மறைந்தது.ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்த மன்னர் புதரை தோண்ட உத்தரவிட்டார். அப்போது ரத்தம் பீறிடவே பணியை நிறுத்தினார்.
அன்றிரவு மன்னரின் கனவில் சிறுமி வடிவில் தோன்றிய சுந்தராட்சி அம்மன், 'காட்டில் முயலாக காட்சியளித்தவள் நானே. புதரை வெட்டும் போது என் மூக்கில் காயம் பட்டுவிட்டது. என்னை எடுத்து கோயில்கட்டு' என ஆணையிட்டாள். மறுநாள் அங்கு தோண்டிய போது அம்மன் சிலை ஒன்று மூக்கில் வெட்டுப்பட்ட நிலையில் கிடந்தது. அங்கேயே மன்னர் கோயில் கட்டினார். இதன் பலனாக மன்னருக்கு ஆண்குழந்தை பிறக்க, 'தமகப்பூராஜன்' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
பலரும் இந்த அம்மனை குலதெய்வமாக வழிபடுகின்றனர்.இவர்கள்சுந்தராட்சிஎனபெண் குழந்தைகளுக்கும், சுந்தரம், சுந்தரராஜன் என ஆண் குழந்தைகளுக்கும் பெயர் வைக்கின்றனர். கடைசியாக 2019ல் இந்தக் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஐப்பசி மாதம் இரண்டாவது செவ்வாய் அன்று கொடை திருவிழா நடக்கிறது. அன்று சுந்தராட்சி அம்மன் தன் தங்கை உச்சிமகாகாளி கோயிலில் ஒருநாள் தங்கி பின் திரும்புகிறாள்
பவுர்ணமியன்று அம்மனை தரிசிப்பவர்களின் விருப்பம் நிறைவேறும்.
0
Leave a Reply