தமிழகத்தை சேர்ந்த நலிந்த நிலையிலிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக 2025ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
விளையாட்டு துறையில் சர்வதேச/தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்காக விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தற்போது நலிந்து நிலையில் (வருமானம் குறைந்து, வேலை இல்லாத நிலை போன்றவை) இருப்பவராக வேண்டும். அரசு/ தனியார் நிறுவனங்கள் அல்லது ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவர்கள், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோருக்கான (Veteran/Master Sports Meet) விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம்/ இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவற்றில் சர்வதேச/தேசிய அளவு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும். சர்வதேச/தேசிய போட்டிகளில் முதலிடம் /இரண்டாமிடம்/ மூன்றாமிடம் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (30.04.2025) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்(இதற்கான 2025ம் ஆண்டு பெறப்பட்ட வருமானச் சான்றினை சமர்ப்பித்தி வேண்டும்).தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் https://sdat.tn.gov.in. விண்ணப்பப் படிவம் கிடைக்கும் மற்றும் தொடர்புடைய மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள், வயது மற்றும் அடையாளச் சான்றிதழ் (ஆதார்), பிறப்பிடச் சான்று (2025-ம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), வருமானச் சான்று (2025-ம் ஆண்டு பெற்று இருக்க வேண்டும்), ஓய்வு பெற்றதற்கான விவரங்கள் (தொழில்/விளையாட்டு சார்ந்த) உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் 24.06.2025 முதல் 31.07.2025- மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply