மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக ரூ.1.71 கோடி மதிப்பிலான மோட்டார் இருசக்கர வாகன இணைப்பு சக்கரம் வழங்கியுள்ளது
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஆனந்தா கார்டன் திருமண மண்டபத்தில் இன்று (13.05.2025) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000/- வீதம் மொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அறிவிக்கும் திட்டங்களின் மூலம் அவர்களது வாழ்வில் புது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையையும், சமூக பாதுகாப்பையும் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை, ரயிலில் பயண சலுகை, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், திருமண நிதி உதவி, கல்வி உதவி தொகை, பராமரிப்பு உதவித்தொகை, சுய தொழில் புரிவதற்கான கடனுதவி, வேலையில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில அளவிலான விருதுகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவருடைய வழிகாட்டலில் தமிழக அரசு வழங்கி வருகிறது.
அதனடிப்படையில், இன்று 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000- வீதம் மொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நமது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பணிகளுக்கு செல்கிறார்கள். அவர்கள் பணிகளுக்கு செல்வதற்கு மிகவும் அடிப்படையாக இருப்பது இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்கள் மிகவும் முக்கியான ஒன்றாக உள்ளது.
0
Leave a Reply