அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் (03.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட நூலக அலுவலகத்தினை பார்வையிட்டு, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அங்கு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம், ஆதார் மையம் மற்றும் முதலமைச்சரின் காப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றின் பல்வேறு சேவைகளை பெற வருகை தந்த பொதுமக்களிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.
மேலும், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்தி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கி, அலுவலகத்தின் செயல்பாடுகள், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டி கையேடுகள், மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
பின்னர், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனையூர் ஊராட்சி, சாட்சியாபுரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை (இரயில்வே திட்டப்பணிகள்) சார்பில், ரூ.61.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய இரயில்வே மேம்பாலம் பணிகளின் முன்னேற்றம் குறித்து, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், வடப்பட்டி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.
0
Leave a Reply