உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், 8,698 விலையில்லா மடிக்கணினிகளை உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் பணிகளை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் (05.01.2026) உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 10 இலட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழாவினைத் துவக்கி வைத்தார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.தங்கபாண்டியன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நல வாரிய துணைத்தலைவர் திரு.இராசா அருண்மொழி அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 8,698 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
உங்களை நம்பித்தான் வருங்கால தமிழ்நாடும், இந்தியாவும், உங்களுடைய வீடும் இருக்கிறது. இந்த மூன்றையும் பார்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இந்த பொறுப்பை நீங்கள் நிறைவேற்றுவதற்கு தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லா வகையிலும் உங்களுக்கு உதவியாக இருக்கிறார்கள்.முதலமைச்சர் அவர்கள் பேசும்போது ஆணித்தரமாக சொன்னது படியுங்கள்,
உங்களை பார்த்து கொள்வதற்கும் உங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்கும் நாங்கள் இருக்கிறோம் என்றார்.எதிர்காலம் உங்கள் கைகளில் வரவேண்டும் என்று சொல்லி உங்களை வாழ்த்தி அமர்ந்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.எதிர்காலத்திலே மாணவர்கள் நீங்கள் எல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் எதிர்கால சமுதாயம் வலுவான, அறிவு சார்ந்த சமுதாயமாக இருக்க வேண்டும்என்பதற்காக தான், செயல்படுத்தி வரும் ஒவ்வொரு திட்டங்களையும் அவர்கள் வரிசைப்படுத்தி சென்றார்கள். அது எல்லாமே உங்களுக்கான திட்டம். ஆகவே அதை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தில் மிகச் சிறந்த சாதனையாளராக வரவேண்டும்.குறிப்பாக கல்வியில் சிறந்தது தமிழ்நாடு. கல்வியிலே சிறந்தது விருதுநகர் மாவட்டம். அந்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நீங்கள் படித்து சிறப்பான எதிர்காலத்தை பெற்று, அனைவரும் பாராட்டும்சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். இந்த மடிக்கணினிகளை நல்ல விதமாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசானது,மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், முதல் தலைமுறை பட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைத் திட்டம், சமூக நீதி விடுதிகள் போன்ற பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
அந்த அறிவிப்பின்படி, இத்திட்டம் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. முதல் கட்டமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்தில்அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கு 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள், கல்வி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கும் நேரடி ஆதாரமாக உதவுகின்றன. டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு(Data Entry), டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital Marketing), வரைகலை வடிவமைப்பு (Graphic Design), குறியிடுதல் (Coding), வலை வடிவமைப்பு (Web Designing), செயற்கை நுண்ணறிவு கருவிகள் (AI Tools), சுயாதீன வேலை (Freelancing) போன்ற துறைகளில் "புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை” என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட உதவுகிறது.
இதனால் குடும்ப வருமானம் உயர்ந்து கிராம நகர இடைவெளி குறைந்து, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும் வாய்ப்பு அமையும். இத்திட்டம், "கல்வி மூலம் சமூக மேம்பாடு தொழில்நுட்பம் மூலம் பொருளாதார முன்னேற்றம்” என்பதையும், "உலகம் உங்கள் கையில்” என்ற தமிழ்நாட்டின் மாபெரும் டிஜிட்டல் கனவையும் நனவாக்கும் வரலாற்றுப் பெருமைகள் சேர்க்கும் மாபெரும் கல்விப் புரட்சித் திட்டம் ஆகும்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.ஆர்.மாதவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply