தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(10.06.2026) தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் தொடர்பாக கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர் மற்றும் மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க திறனை மேம்படுத்துவதற்காக புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு(IEDP)திட்டத்தை 2016ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் “நிமிர்ந்து நில்” என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்(TNYIEDP) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் நோக்கம் 5 ஆண்டுகளில் 10,000 மாணவர்களை தொழில்முனைவோர்களாக (Student Entrepreneurs) உருவாக்குவது, அறிவியல், புதுமை மற்றும் தொழில்நுட்பத்திறன் வளர்ப்பு, செயற்கை நுண்ணறிவு, இ-காமர்ஸ் மற்றும் உற்பத்தித் துறை போன்ற துறைகளில் பயிற்சி அளிப்பது ஆகும்.இத்திட்டத்தின் கீழ் ரூ.19.57 கோடி மாணவர் தொழில்முனைவோர்களுக்கும், ரூ.2 கோடி அடுக்கு-1 மற்றும் அடுக்கு-2 (Tier-2 and Tier-3) நகரங்களிலுள்ள 9,000 இளைஞர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு முயற்சி உணர்வை ஏற்படுத்துதல், தொழில்முனைவோர் திறன், புதுமை சிந்தனை வழங்கல், திட்ட முன்வைப்பு, பயிற்சி, கையேடு, வழிகாட்டுதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது நிமிர்ந்து நில் திட்டத்தை மையக்கல்லூரி மற்றும் உறுப்பு கல்லூரி நிறுவனங்கள் (Hub and Spoke) முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமானது மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் நிமிர்ந்து நில் திட்டத்தை செயல்படுத்துவார்கள். மற்ற உயர் கல்வி நிறுவனங்கள் உறுப்புக்கல்லூரிகளாக செயல்படுவார்கள். விருதுநகர் மாவட்டத்தில் கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் மைய கல்லூரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிமிர்ந்து நில் திட்டத்தை கலசலிங்கம் நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்படுத்தும்.
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும் குறிப்பாக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி(Entrepreneurship Development Programme), கட்டண பயிற்சி(paid Programmes), பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்(School Innovation Development Project), தமிழ்நாடு இளைஞர் புத்தாக்க மற்றும் தொழில் முனைவோருக்கான பயிற்சி(TNYIEDP), புத்தாக்க பற்று சீட்டு திட்டம் மற்றும் Innovation Voucher Programme A&B, அறிவுசார் காப்புரிமை (Intellectual Property Facilitating Centre), தொழில் முனைதல் மற்றும் புத்தகத்திற்கான சான்றிதழ் படிப்பு (Certificate Programme in Entrepreneurship and Development) உட்பட பல்வேறு செயல்பாடுகளை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
நிமிர்ந்து நில் என்ற திட்டமானது மாணவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் மாணவர்கள் சமுதாயத்தில் அல்லது வேறு தொழில்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை மாதிரி வடிவம் கொண்டு விளக்கம் பட்சத்தில் அந்த யோசனைகளுக்கு ரூ.1 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும்.மாணவர்களுக்கு ஐடியேசன் கேம்ப்(ideation Camp) இரண்டு நாள் பயிற்சியும், பூட் கேம்ப்(Boot Camp) மூன்று நாள் பயிற்சியும் வழங்கப்படும். இறுதியாக சென்னையில் நடைபெறக்கூடிய இறுதி சுற்றில் வெற்றி பெறும் 30 நபர்களுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படும். மேலும், வெற்றி பெற்ற மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான வளர் தொழில் மையங்களோடு (Incubation Centre) அவர்களுக்கு இணைப்பு ஏற்படுத்தி வசதிகள் செய்து தரப்படும்.
எனவே, இத்திட்டத்தின் நோக்கம் குறித்து அறிந்து ஒவ்வொரு கல்லூரியிலும் இத்திட்டத்தை முன்னெடுத்து மாணவர்களிடத்தில் எடுத்துச் செல்ல அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், தமிழ்நாடு இளைஞர் கண்டுபிடிப்பு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வைகள் குறித்தும், கல்லூரிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும், மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பங்களிப்பு குறித்தும், இந்த புதுமையான நவீன உலகில் மாணவர்கள் தொழில்முனைவோராக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பது குறித்தும், மாணவர்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்கு கல்லூரிகளின் பங்களிப்பு குறித்தும் கலந்து கொண்ட 40 க்கும் மேற்பட்ட கல்லூரி முதலவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, விருதுநகர் மாவட்ட திட்ட மேலாளர்(தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.பிலிப் மில்டன், திருநெல்வேலி மாவட்ட திட்ட மேலாளர்(தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.சிவபாரதி, மைய கல்லூரி ஒருங்கிணைப்பாளர்(கலசலிங்கம் பல்கலைக்கழகம்) டாக்டர்.அறிவரசன் உட்பட 40 க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த முதல்வர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply