25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைத்தலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும்  பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைத்தலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் .

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் அதன் பின்னர் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (03.09.2026) நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில், 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் விநாயகர் சிலை ஊர்வலம், சிலை கரைத்தலின்  போது, அரசின் விதிமுறைகள் மற்றும் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் வழிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும்.

விழா ஏற்பாட்டாளர்கள் விநாயகர் சிலைகள் நிறுவவும் மற்றும் ஊர்வலம் நடத்தவும் படிவம் -1-ல் சிவகாசி சார் ஆட்சியர், சாத்தூர்/அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர்களிடமிருந்து உரிய அனுமதி பெற  வேண்டும். சிலை உற்பத்தியாளர்கள் / சிலை வடிவமைப்பாளர்கள்/ கைவினைஞர்கள் /கலைஞர்கள் ஆகியோர்களுக்கு சிலை செய்வதற்கான உரிமம் அல்லது அனுமதி ஆனது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் நகர்புற நிர்வாகத்தினரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும். பொது அமைதி மற்றும் பாதுகாப்பு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை பேணும் பொருட்டு வருவாய்த்துறை / காவல்துறை / மாசுகட்டுபாட்டு வாரியம் ஆகிய துறையினரால் வகுக்கப்படும் நிபந்தனைகளை கண்டிப்பாக விழா ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்ட்டர் ஆப் பாரீஸ் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) போன்ற பொருட்களால் சிலைகள் அமைக்கப்படக் கூடாது.  

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம் / எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.  மேலும் சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக் கூடாது.  மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்கள் ஆகியவைகளை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் போன்ற பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

சிலைகள் நிறுவப்படும் இடங்களில் அமைக்கப்படும் தற்காலிக அமைப்பு, எளிதில் தீப்பற்றாத பொருட்களைக் கொண்டு (தகரம் மற்றும் சிமிண்ட் அட்டை) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சிலையைச் சுற்றிலும் பாதுகாப்பான தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கண்டிப்பாக எளிதில் தீப்பற்றக் கூடிய தென்னங்கீற்று போன்ற பொருட்களிள் பயன்பாடு கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். சிலைகளானது அடி மட்டத்திலிருந்து அதாவது மேடை மற்றும் பீடம் உட்பட அதிகபட்சம் 10 அடி உயரத்தில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும். மற்ற வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை மற்றும் கல்வி சார்ந்த நிறுவனங்கள் அருகில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு அனுமதி கிடையாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது.  ஒலிபெருக்கியினை காலை 2 மணி நேரம் மற்றும் மாலை 2 மணி நேரம் வழிபாட்டு நேரங்களில் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும். சிலைகள் வைக்கப்படும் இடங்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாத இடத்தில் வைக்க வேண்டும். சிலைகள் வைக்கும் இடம், ஊர்வலம் செல்லும் பாதை போன்றவற்றை குறிப்பிட்டு அனுமதி பெற வேண்டும். சிலைகள் அமைக்கும் விழா குழுவினர், சிலை குழு அமைத்து, சிலை வைக்கப்பட்ட நாள் முதல், சிலையை கரைக்கும் நாள் வரை குறைந்தபட்சம் இரு நபர்கள் தொடர்ந்து காவல் துறையினருடன் சேர்ந்து  24 மணி நேரமும்  பாதுகாப்பு அலுவலில் இருக்க வேண்டும்.

அரசியல் மற்றும் சாதி ரீதியான டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி கிடையாது. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட தேதியிலிருந்து 5 தினங்களுக்குள் சிலைகள் கரைக்கப்பட வேண்டும். ஊர்வலம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் காவல்துறையினர் அனுமதிக்கும் வழித்தடங்களில் மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவேண்டும். ஒவ்வொரு சிலைக்கும் ஒவ்வொரு நாளும் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்ட குழு உறுப்பினரின் பெயர், விலாசம், கைபேசி எண் ஆகியவற்றை முன்கூட்டியே தேதி வாரியாக பட்டியலிட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் எழுத்து மூலமாக கொடுக்க வேண்டும். ஊர்வலத்தின்போது பிற மதத்தினரின் மனதை புண்படுத்தும்படியான கோசங்களோ, வாசகங்களையோ பயன்படுத்தக்கூடாது.

விநாயகர் சிலைகளை மினி லாரி மற்றும் டிராக்டர்கள் ஆகியவற்றில் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மாட்டுவண்டிகளில் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. மோட்டார் வாகனச்சட்டம் 1988-ன் படி அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விநாயகர் சிலைகள் கரைக்கக்கூடிய வாகனங்களில் செல்ல வேண்டும். வருவாய் கோட்டாட்சியரின் அனுமதியில்லாமல் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும். அவ்வப்போது நிலவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு, அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை மாற்றம் செய்யவோ, வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவோ காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு அதிகாரம் உண்டு. ஊர்வலத்தின்போது ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது. பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. ஊர்வலம் செல்லும்போது பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ இடையூறு செய்யக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு சிலைகள் கரைக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலை வைக்க வேண்டும். புதிய இடங்களில் சிலைகள் வைக்கவும்,  புதிய வழித்தடங்களில் செல்லவும் அனுமதி மறுக்கப்படுகிறது. விழா ஏற்பட்டாளர்கள், பந்தல்கள் மற்றும் மின் அமைப்பு அலங்காரங்கள் ஆகியவைகளுக்கான அனுமதியினை உரிய அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். வழிபாட்டுப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எளிதில் எரியக்கூடிய பொருட்கள் ஏதும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். விநாயகர் வழிபாட்டின் போது அங்கீகரிக்கப்படாத மின் இணைப்பு மற்றும் மின் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் ஏதும் இல்லை  என்பதை உறுதி செய்திட வேண்டும். விநாயகர் வழிபாட்டு மற்றும் ஊர்வலத்தின் போது,  போதிய முதலுதவி மற்றும் அவசர மருத்துவ வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.விருதுநகர் மாவட்டத்தில், விநாயகர் சிலைகளை தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்கப்படவேண்டும்.

அதன்படி, விருதுநகரைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து வரும் சிலைகள் கல்கிடங்கிலும், ஆவுடையாபுரத்திலிருந்து வரும் சிலைகள் அங்குள்ள உபயோகப்படுத்தப்படாத கிணற்றிலும்,  சிவகாசி நகர்ப்புறங்களில் இருந்து வரும் சிலைகள் தெய்வாணை நகரில் உள்ள உபயோகப்படுத்தப்படாத கிணற்றிலும்,  ஆ.புதுப்பட்டி மாரனேரி ஊர்களில் இருந்து வரும் சிலைகள் மாரனேரி கண்மாயிலும், திருவில்லிபுத்தூர்  நகரிலிருந்து வரும் சிலைகள் திருவில்லிபுத்தூர் மடவார் வளாகத்திலும், பந்தல்குடியைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து  வரும் சிலைகள் பந்தல்குடி பெரிய கண்மாயிலும், இராஜபாளையம் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகள் ஜெயவிலாஸ் பஸ் கம்பெனிக்கு எதிர்புறம் உள்ள வடுகவூரணியிலும், அம்மாபட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளத்திலிருந்து வரும் சிலைகள் அப்பகுதியிலுள்ள  உபயோகப்படுத்தாத கிணறு, தெப்பம் மற்றும் ஆலங்குளம் குவாரி பகுதியிலும், கிருஷ்ணன்கோவில் சிலைகள் இராமச்சந்திராபுரம் கண்மாயிலும்,  குன்னூர் சிலைகள் குன்னூர் கண்மாயிலும், வத்திராயிருப்பு மற்றும் கூமாபட்டி சிலைகள் மகாராஜபுரம் மற்றும் கூமாபட்டி பெரியகுளம் கண்மாயிலும், அருப்புக்கோட்டை நகர்புறத்தில் இருந்து வரும் சிலைகள் பந்தல்குடி சாலையில் உள்ள பெரியகண்மாயிலும்,திருவில்லிபுத்தூர் தாலுகாவிலிருந்து வரும் சிலைகள் திருவண்ணாமலை  கோனகிரி குளத்திலும்  கரைக்க வேண்டும்.

    விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது சிலை அமைப்பினர் / நிர்வாகிகள் ஊர்வலம் அமைதியான முறையில்  நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல் துறையினருக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும்  மேற்கூறிய விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News