மல்லாங்கிணறு மற்றும் காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு மற்றும் காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (03.09.2026) நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.மாவட்டத்தில் ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள், அடிப்படை வசதிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த பணிகளின் முன்னேற்றம், தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மல்லாங்கிணறு பேரூராட்சிக்கான குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.18 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 5 புதிய ஆழ்துளை கிணறுகள், 3 ஆழ்துளை கிணறுகள் பராமரிப்பு பணிகள், பேரூராட்சியில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்குவதற்காக பெறப்பட்டுள்ள உபகரணங்கள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.மேலும், காரியாபட்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு பணிகள், விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு, பள்ளி மாணவியர்களுக்கான அரசு சமூக நீதி விடுதி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.
பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும் உரிய பயனாளிகளை சென்றடைவதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்கவும், பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கும் வகையிலும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படவும், குடிநீர் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவும், டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுப்பதில் பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பள்ளி மாணவியர் சமூக நல விடுதிகளில் மாணவியர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, பேரூராட்சி செயல் அலுவலர்கள், தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
0
Leave a Reply