மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் (09.02.2026) நடைபெற்ற விழாவில், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில், மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு உணவினை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அறிவித்தார்.அதன்படி, சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த 2025 நவம்பர் 15 ஆம் தொடங்கி வைத்தார். தற்போது, இன்று மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம் விரிவாக்கத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சியில் 508 தூய்மை பணியாளர்களுக்கும், இராஜபாளையம் நகராட்சியில் 577 தூய்மை பணியாளர்களுக்கும், விருதுநகர் நகராட்சியில் 299 தூய்மை பணியாளர்களுக்கும், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் 272 தூய்மை பணியாளர்களுக்கும், அருப்புக்கோட்டையில் நகராட்சியில் 391 தூய்மை பணியாளர்களுக்கும் மற்றும் சாத்தூர் நகராட்சியில் 146 தூய்மை பணியாளர்களுக்கும் என மொத்தம் 5 நகராட்சிகளில் பணிபுரியும் 1685 தூய்மை பணியாளர்களுக்கும்,பேரூரட்சிகளில் செட்டியார்பட்டியில் 68 தூய்மை பணியாளர்களுக்கும், காரியாபட்டியில் 77 தூய்மை பணியாளர்களுக்கும், மல்லாங்கிணரில் 39 தூய்மை பணியாளர்களுக்கும், மம்சாபுரத்தில் 38 தூய்மை பணியாளர்களுக்கும், எஸ்.கொடிக்குளத்தில் 30 தூய்மை பணியாளர்களுக்கும், சேத்தூரில் 61 தூய்மை பணியாளர்களுக்கும், சுந்தரபாண்டியத்தில் 31 தூய்மை பணியாளர்களுக்கும், வ.புதுப்பட்டியில் 33 தூய்மை பணியாளர்களுக்கும், வத்திராயிருப்பில் 69 தூய்மை பணியாளர்களுக்கும் என மொத்தம் 9 பேரூராட்சிகளில் பணிபுரியும் 446 தூய்மை பணியாளர்களுக்கும்என ஆக மொத்தம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் 2639 தூய்மை பணியாளர்களுக்கு உணவுகள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் மூலம், வாரந்தோறும் திங்கட்கிழமை இட்லி, மெதுவடை, சாம்பார், செவ்வாய் கிழமை ரவா கிச்சடி மற்றும் கார சட்னி, புதன்கிழமை வெண்பொங்கல் மற்றும் சாம்பார், வியாழக்கிழமை ரவா உப்புமா மற்றும் தேங்காய் சட்னி, வெள்ளிக்கிழமை இட்லி, மெதுவடை, சாம்பார், சனிக்கிழமை ரவா பொங்கல் சாம்பார், ஞாயிற்றுக்கிழமை சேமியா கிச்சடி, சாம்பார் போன்ற உணவு வகைகள் ஒப்பந்ததாரர்கள் மூலம் சுவையாகவும், தரமாகவும் சமையல் செய்து வழங்கப்பட உள்ளது என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் திருமதி பெ.விஜயலெட்சுமி, அருப்புக்கோட்டை நகர்மன்றத்தலைவர் திருமதி சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையாளர் திரு.ராஜமாணிக்கம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply