நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது?
எதைப் பார்க்க வேண்டும், எதைக் "கேட்க வேண்டும். எதைப் பேச
வேண்டும் என்று, மகாத்மா காந்தி அடிகள் சிறப்பாக மூன்று குரங்குகள்
கண், காது, வாய் மூடிய படி உட்கார்ந்து இருப்பதைப் போன்ற படம்,
மக்கள் மனதில் அப்படியே பதிந்து விட்டது.
மனம் ஒரு குரங்கு, குரங்கு மனம் எல்லாவற்றையும் பார்க்க, கேட்க
பேசத் தூண்டும். அதை அடக்கி விட்டால் எல்லாமே இன்பமயமாக
ஆகிவிடும். மனதில் சஞ்சலங்கள் நின்று போய்விடும். அநாவசியமாக
எதையும் நினைத்து அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.
தேவையான, அவசியமான விஷயத்தில் மட்டுமே நம் கண், காது,
பேசுவதில் சாப்பிடுவதில் ஈடுபடவேண்டும். எதற்காக இறைவன்
நம்மைப் படைத்தான். அதற்கு மட்டுமே நம்மை நாம் உபயோகப்படுத்த
வேண்டும்.
பிறந்தோம், இறந்தோம் என்றில்லாமல் நாம் பிறந்த மண்ணிற்கு,
நம்மைத் தாங்கி நிற்கும் பூமிக்கு நாம் உபகாரமாக இல்லாவிட்டாலும்,
உபத்திரம் செய்யக் கூடாது. சின்ன சின்ன விஷயங்கள் நம்மைச் சுற்றி
நடப்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். நல்லவை நடந்தால்
ஏற்றுக்கொண்டு நாமும் உதவலாம். தீமை நடந்தால் தடுக்கும் சக்தி
நமக்கு கண்டிப்பாக வேண்டும்.
'ஊரோடு ஒத்து வாழ்' என்பதற்கு இணங்க ஊரில் நடக்கும். சில
முறையற்ற செயலை ஏற்றுக் கொள்ளவே கூடாது. அது தவறு என்று
வன்முறையில் ஈடுபடாமல் அன்பாக நாமே செய்து காட்டி, அதனால்
விளையும் நன்மையை புரிய வைக்க வேண்டும்.
ஒரு குறும்படம், ஒரு பெரியவர் கடையில் வாழைப்பழத்தை வாங்கி
சாப்பிட ஆரம்பித்தார். அதை ஒரு சின்னக் குழந்தை பார்த்துக்கொண்டே
இருக்கிறது. உடனே அந்தப் பெரியவர் அக்குழந்தைக்கு ஒரு
வாழைப்பழம் கொடுக்கிறார். அந்தக் குழந்தை அவருடைய முகத்தைப்
பார்க்கிறது. உடனே அவர் வாழைப்பழத்தை எப்படி உரிப்பது என்று
உரித்துக் காண்பிக்கிறார். உடனே குழந்தையும் உரிக்கிறது. இருவரும்
சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டவுடன் பெரியவர் தோலை வீசி விடுகிறார்.
அக்குழந்தையோ தான் சாப்பிட்ட பழத்தின் தோலையும், அவர் எறிந்த
தோலையும் சேர்த்து எடுத்து குப்பைத் தொட்டியில் கொண்டு போய்
போடுகிறது.
இது ரெம்ப சின்ன விஷயம். அக்குழந்தைக்கு வேண்டாதவற்றை
குப்பையில்தான் போட வேண்டும், என்ற பண்பு தெரிகிறது. மேலும்
பெரியவர் எறிந்த குப்பை வெளியில் இருக்கக்கூடாது என்று அதையும்
எடுத்து குப்பையில் போடுகிறது என்றால் எப்பேர்ப்பட்ட உயர்ந்த பண்பு
அக்குழந்தைக்கு சின்ன வயதிலேயே பதிந்து விட்டது. அக்குழந்தை
அவரிடம் 'கீழே போடாதீங்க குப்பையிலே போடுங்க' என்று, உபதேசம்
செய்ய வில்லை. தன் கண் முன்னே நடக்கும் - தவறைத் தானே திருத்தி
விடுகிறது.
இப்படி எல்லா விஷயத்திலும் நாம் நம்மை மாற்றிக்கொண்டால்
குப்பையில்லா நகரமாக மாற்றலாம். சாலை விதிகளை தயவு
செய்து எல்லோரும் பின்பற்றும் கட்டாயத்தில் உள்ளனர். விலை
மதிப்பற்ற உயிரைப் பாதுகாக்க சாலை விதிகளை மதிக்க வேண்டும்.
தவறு செய்பவர்களை எல்லோரும் சேர்ந்து திருத்தப் பாடுபட வேண்டும்.
நாம் சொன்னால் ஏற்றுக் கொள்ளாத மக்களின் இடையே நாம்
வழிகாட்டியாக இருக்க பலவழிகளில் நம்மை மாற்றிக் கொள்ள
வேண்டும்.
அர்த்தமுள்ள விஷயங்களை கேட்க வேண்டும். நல்ல படங்களை
பார்க்க வேண்டும். நல்ல விஷயங்களை பேச வேண்டும். நல்லதையே
சாப்பிட வேண்டும். இந்த உபதேசம் யாருக்குமே கேட்க சகிக்காது.
ஆனால் உண்மையிலேயே இவை நல்லதா? கெட்டதா? உங்கள் மனதை
தொட்டு சொல்லுங்கள். நிச்சயமாக நல்லது என்று தான் சொல்லும்,
உங்கள் மனம். ஆனாலும் குரங்குமனம் அநாவசியங்களுக்காக
அலைந்து திரிந்து பின் ஓய்ந்து நிம்மதி இல்லாமல் தன் வாழ்நாளை
முடிக்கும்.
எவை எல்லாம் நம் உணர்வுகளை சிந்திக்க, சிரிக்க. அதே சமயத்தில் நம்
வாழ்க்கை முறையை மாற்றி, அதாவது, திருப்பிப் போடுகிறதோ
அதுதான் நமக்கு உண்மையான நிரந்தரமான சந்தோஷத்தைக்
கொடுக்கும். சின்ன, சின்ன விஷயம்தானே! என்று அலட்சியப்படுத்தக்
கூடாது. அந்தக் குறும்படம் பார்த்த எல்லோருமே கண்டிப்பாக
குப்பையை குப்பைத் தொட்டியில்தான் போடுவார்கள், என்பதில்
சந்தேகமில்லை. ஆக இனிமேல் கவனியுங்கள். நம்மைச் சுற்றி என்ன
நடக்கிறது ? என்பதை!
0
Leave a Reply