மாநகராட்சி/நகராட்சி/ பேரூராட்சிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்து வார்டு அளவிலான சிறப்பு குழுக்கூட்டம் நடைபெற உள்ளது .
விருதுநகர் மாவட்டத்தில், மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டு அப்பகுதி வார்டு உறுப்பினர் தலைமையில், மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி அலுவலர் ஒருவரை கூட்டுநராக கொண்டு அவ்வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்களை 27.10.2025. 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தினங்களில் நடத்தி பின்வரும் பொருள்கள் குறித்து விவாதித்து, அப்பொருள்களில் முன்னுரிமை அடிப்படையில் ஏதேனும் மூன்று (3) கோரிக்கைகள் மட்டும் செயல்படுத்தும் விதமாக அக்கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை எடுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி, இக்கூட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்து அதில் உள்ள இடர்பாடுகளை விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளை பசுமையாக்கும் வகையில் திறந்தவெளி இடங்கள், சாலையோரப் பகுதிகள், குளக்கரைகள் மற்றும் ஏரிக்கரைகளில் சமூக ஆர்வலர்கள் தொழிற்சாலை/இதர நிறுவன பங்களிப்புடன் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் உள்ள பூங்காக்களை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் மூலம் பராமரிப்பு செய்வது குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்பாக மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் மற்றும் வழக்கமாக மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து விவாதித்தல்.
நகராட்சிப் பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேம்படுத்த பொதுமக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் “நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” செயல்பாடுகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தும் முறைகள் குறித்து விவாதித்தல். நகாரட்சிப் பகுதிகளில் நகராட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் குறித்து விவாதித்தல். நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புனரமைப்பு செய்து முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல். நகராட்சிகளில் அமைந்துள்ள நீர்நிலைகள் மாசு ஏற்படாமல் இருக்கவும் நீராதாரங்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.
எனவே, மேற்கண்ட கருப்பொருள் தொடர்பாக விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 01 மாநகராட்சி, 05 நகராட்சிகள் மற்றும் 09 பேரூராட்சிகளின் எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் 27.10.2025 (திங்கள்). 28.10.2025(செவ்வாய்) மற்றும் 29.10.2025 (புதன்) ஆகிய 03 தினங்களில் சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினர் தலைமையில் அந்தந்த உள்ளாட்சி துறையின் அலுவலக கூட்டுநர் மூலம், குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு வார்டு குழுக்கூட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு , மேற்கண்ட 09 பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் ஏதேனும் 03 கோரிக்கைகள் மட்டும் செயல்படுத்தும் விதமாக அக்கோரிக்கைகளை தீர்மானமாக இயற்றி “முதல்வரின் முகவரி மனு” என்ற அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உரிய ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply