விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாரட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டு.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில், 24.11.2025 அன்று நடைபெற்ற புத்தகத்திருவிழா – 2025 ன் இறுதி நாளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பாரட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் வழங்கி பாராட்டினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் – 2026 பணிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, நவம்பர் 4ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், விருதுநகர் மாவட்ட வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்வதில் எழும் சந்தேகங்களுக்கு (சட்டமன்றத் தொகுதி, வரிசை எண், பாகம் எண்) அதனை உடனடியாக நிவர்த்தி செய்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றும் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து, வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்காகவும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திரும்ப அளிப்பதற்காகவும், அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் 19-11-2025 புதன் கிழமை மற்றும் 20.11.2025 வியாழக் கிழமை ஆகிய 2 தினங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, வாக்காளர்கள் பெருமளவில் இம்முகாம்களில் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த படிவங்களைப் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கினர். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய இயலாத முதியோர் இல்லங்களில் வசிக்கும் வாக்காளர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கான சிறப்பு உதவிமையங்கள் 23.11.2025 அன்று ஏற்படுத்தப்பட்டு வாக்காளர் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டன.
இதுவரை, விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 7-சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 16,26,485 வாக்காளர்களில் 15,95,165 (98.07%) வாக்காளர்களுக்கு கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, இவ்வாக்காளர் படிவங்களில் 8,70,829 (53.54%) கணக்கெடுப்புப் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1,901 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கியும்,பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
எனவே, வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கியும், வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்களை உடனடியாக நிவர்த்தி செய்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து திரும்ப பெற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றும் பணிகளில் ஈடுபட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பாரட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.கேசவதாசன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், இ.ஆ.ப., துணை இயக்குநர்( திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மரு.இரா.முருகன்,இ. வ.ப., சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(நில எடுப்பு) திருமதி சசிகலா உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply