காமன்வெல்த் நிறைவு விழா: இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட கொடி... 2030 போட்டிக்கு பிரமாண்ட வரவேற்பு.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கோலாகல நிறைவு விழாவுடன் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் 2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்த உள்ள இந்தியாவிடம் காமன்வெல்த் கொடி அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 74 நாடுகளைச் சேர்ந்த 2,729 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் 4-வது இடத்தைப் பிடித்தது. குறிப்பாக குத்துச்சண்டையில் 7 தங்கம் உள்பட 10 பதக்கங்களை வென்று இந்திய அணி சாதனை படைத்தது.
இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடைபெற்ற நிறைவு விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. 2030-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியை முன்னிறுத்தும் வகையில் இந்திய கலாசாரம், பாரம்பரியம் மற்றும் 'உலகம் ஒரே குடும்பம்' என்ற இந்திய தத்துவத்தை பிரதிபலிக்கும் இசை, நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
'வந்தே மாதரம்' பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடிகையும் முன்னாள் உலக அழகியுமான மனுஷி சில்லர் தலைமையில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் நடனமாடினர். இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் தனது மகன்கள் சித்தார்த், ஷிவத்துடன் இணைந்து பாடியதோடு, குஜராத் பாடகி பூமி திரிவேதியும் தனது குழுவினருடன் இசை நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
0
Leave a Reply