பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தலைமையாசிரியர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உளவியல் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டினைத் தடுப்பது தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (17.09.2026) தொடங்கி வைத்தார்.
ஆசிரியர்களின் பணி மகத்துவத்தினை நன்கு அறிவேன். ஏனெனில் எனது பெற்றோரும் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது அனைவரது முக்கியப் பொறுப்பாகும். பள்ளி என்பது மாணவர்கள் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் கல்வி கற்கக்கூடிய சூழலை வழங்கும் இடமாக இருக்க வேண்டும். மாணவர்களின் கல்வி வளர்ச்சியுடன் அவர்களின் உடல், மன மற்றும் சமூக நலனிலும் தலைமையாசிரியர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய முறையில் கையாள்வதற்கான திறனை தலைமையாசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தயக்கமின்றி ஆசிரியர்களிடம் தெரிவிக்கும் வகையில் நம்பிக்கையான சூழலை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.குழந்தைகள் உளவியல் தொடர்பாக, ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட மனநிலை, குடும்பச் சூழல், கல்வி சார்ந்த அழுத்தம் மற்றும் அவர்களின் நடத்தை மாற்றங்களை ஆசிரியர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும். மாணவர்களின் பிரச்சினைகளை வெறுமனே ஒழுக்கப் பிரச்சினையாகக் கருதாமல், அவர்களின் பின்னணியைப் புரிந்துகொண்டு அன்புடனும், பொறுமையுடனும் அணுக வேண்டும். தேவையான சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் மற்றும் உரிய நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்றுத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதில் பள்ளிகளுக்கு முக்கியப் பங்கு உள்ளது. மாணவர்களுக்கு போதைப்பொருட்களின் உடல் மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும், அதனால் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் தவறான பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கான நேர்மறையான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் தொடர்ந்து நடத்த வேண்டும்.
மாணவர்களின் நடவடிக்கைகளில் திடீர் மாற்றங்கள், பள்ளிக்கு வருகையில் குறைவு, கல்வியில் ஆர்வம் குறைதல் அல்லது வேறு கவலைக்குரிய அறிகுறிகள் தென்பட்டால், அவற்றை கவனமாக அணுகி, மாணவர்களை குற்றம் சாட்டாமல் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.அதன்படி, இன்று நடைபெறும் இத்திறன் வளர்ப்புப் பயிற்சியின் மூலம் தலைமையாசிரியர்களுக்கு குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் உளவியல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான நடைமுறை அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
எனவே, இந்த பயிற்சி வகுப்பினை தலைமையாசிரியர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு, தங்களது பள்ளிகளில் பாதுகாப்பான, போதைப்பொருள் இல்லாத, மாணவர்களின் மனநலத்தை மதிக்கும் சூழலை உருவாக்குவதில் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி, மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply