தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் தனியார் வேலை வாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,தலைமையில் (21.06.2026) வழங்கினார்.
நமது மாவட்டத்தில், பல பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பல மாவட்டங்களில் இத்தனை நிறுவனங்கள் வந்திருந்தாலும், போதிய திறன்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலையை மாற்றுவதற்காக, நமது உள்ளூர் கல்லூரிகளுடன் இணைந்து, நிறுவனங்களுக்கு தேவையான திறன்களை கல்லூரிகளிலேயே மாணவர்களுக்கு கற்பித்து, அதற்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். அதன் பின்னர் வேலைக்காக அனுப்பப்படும் இளைஞர்கள் யாரும் “வேலைவாய்ப்பு இல்லை” என்று சொல்ல வேண்டிய நிலை இருக்கக் கூடாது என்பதே முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் கனவு.
இளைஞர்கள் யாரும் வேலை இன்றி இருக்கக் கூடாது. வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஏனெனில் நானும் அந்த நிலையை அனுபவித்திருக்கிறேன். பல நிறுவனங்களில் விண்ணப்பித்தும், வேலை கிடைக்காமலும், பதில் வராமலும் நீண்ட நாட்கள் காத்திருந்திருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கும் இருப்பதால், உங்களுடைய சிரமங்களையும் என்னால் உணர முடிகிறது.அதனால்தான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. திறன் பயிற்சிக்கும் வேலைவாய்ப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.வின்ஃபாஸ்ட் போன்ற நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை தூத்துக்குடியில் விரிவுபடுத்துகின்றன. அதேபோல், “ஹூண்டாய்” நிறுவனம் வருவதன் மூலம் அங்குள்ள குடியிருப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் பல வாய்ப்புகள் உருவாகின்றன.
இவ்வாறு பல நிறுவனங்களை அணுகி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆகையால் யாரும் வேலை இன்றி இருக்கக் கூடாது என்பதே இந்த அரசின் நோக்கமாகும்.நீங்கள் உங்களுடைய திறன்களை தொடர்ந்து வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப் படிப்பை முடித்துவிட்டோம் என்று நிறுத்திக் கொள்ளாமல், பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகளில் பங்கேற்க வேண்டும். இணையத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படும் பல சான்றிதழ் பயிற்சிகளையும் பயன்படுத்திக் கற்றுக்கொள்ளலாம். அதோடு, நமது பகுதிகளிலும் பல பயிற்சி மையங்கள் தொடங்கப்படுகின்றன.
இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தில், பல்வேறு தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் எந்த தகவலையும் ஒன்றுக்கு இருமுறை ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.திறன் வளர்ச்சிக்கான பல சிறந்த கருவிகளும் இலவச சான்றிதழ் பயிற்சிகளும் கிடைக்கின்றன. அவற்றை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். அவற்றைப் தாங்கள் அனைவரும் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இன்று வேலைவாய்ப்பு பெற்ற 20 இளைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் தொடர்ந்து முன்னேறி உயர வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் படித்த இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப, அரசுப் பணியினை வழங்கிடும் வகையில் அனைத்து பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேர்மையான முறையில் திறமையானவர்களை பணியமர்த்திட உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.இருப்பினும், தொழில் வளர்ச்சியினை ஏற்படுத்தி அதன் வாயிலாக ஏராளாமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடவும், அதன் மூலம் நிரந்தர வருவாய் ஈட்டும் திறன் பெற்றிடவும், பொருளாதார இடையூறுகளின்றி தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இதுபோன்ற, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
அதைப்போல், தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களையும், திறமையானவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.வேலை நாடுநர்கள், தொழில் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து பணியில் சேரவும், தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் சிறந்த களமாக இந்த வேலை வாய்ப்பு முகாம் அமைகிறது.ஏராளமான இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் விளம்பரப் பலகைகள், துண்டு பிரசுரங்கள், செய்தித் தாள்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த வேலை வாய்ப்பு முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள், மற்றும் பொறியியல் (Engineering) முடித்த இளம் பட்டதாரிகள் வரையிலான பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், இந்த வேலை வாய்ப்பு முகாமில் 75-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர்.தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளவர்கள் தங்களது குடும்பம் மற்றும் தங்களது நலன் மற்றும் தேவையினைக் கருத்தில் கொண்டு பணியில் சேர்ந்திட வேண்டும்.
இதன் மூலம் கிடைக்கும் வருவாயினைக் கொண்டு உயர்பணிகளுக்கும், முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தக் கொள்ள வேண்டும் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொது) திருமதி சு.ஞானபிரபா, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிக் கழக மாவட்ட மேலாளர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், ஆர்.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளி முதல்வர் திருமதி முத்துலட்சுமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply