அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (05.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயாராக இருக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் மற்றும் வயதானவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை உடனுக்குடன் வழங்க சுகாதாரத் துறையின் மூலம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எவ்வித இடையூறுமின்றி செல்வதற்கு ஏற்றவாறு பாதைகளை அமைத்திட வேண்டும். திருவிழாவிற்கு வருகின்ற பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளை தேவையான இடங்களில் ஏற்படுத்தி வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிட வசதிகளும், தற்காலிக கழிப்பிட வசதிகளையும் அமைத்திட வேண்டும். பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தி தரிசனம் செய்திட காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், தற்காலிக கடைகள் மற்றும் அன்னதானம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் உணவு வகைகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி வழங்கப்படுகிறதா என ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து அதனை உறுதி செய்திட வேண்டும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்புகள் வழங்க வேண்டும். பக்தர்கள் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நெகிழி (Plastic) பைகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து அதற்குப் பதிலாக மஞ்சப்பை அல்லது மக்கும் காகித பைகளைப் பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும். தாணிப்பாறை அடிவாரத்தில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுவதற்கு தேவையான துப்புரவு பணியாளர்கள் பணியாற்றிட இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை பெறுவதற்கு ஏதுவாக அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட வேண்டும். சதுரகிரிக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கேற்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கையும், வெளியூர் பேருந்துகள், தனிநபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக வாகன நிறுத்தங்களும், தேவையான இடங்களில் CCTV-கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பாளர்களால் கண்காணிக்கப்பட வேண்டும்.
எனவே தொடர்புடைய அரசு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து பணிகளையும் திருவிழாவிற்கு முன்னதாக முடிக்க வேண்டும் எனவும், சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் சென்று சாமி தரிசனம் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல்,இ.கா.ப., திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply