தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தூய்மைப் பணியாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாமினை தொடங்கி வைத்தார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி மாஸ்டர் பிரிண்டர்ஸ் திருமண மண்டபத்தில் (22.07.2026) தூய்மைப் பணியாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கான அரசு சேவைகள் மற்றும் நலத்திட்ட முகாமினை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு வீடும், நாடும் ஆரோக்கியமாக இருக்க உறுதுணையாக இருக்கும் தூய்மைக் காவலர்களின் நலனை பாதுகாக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்களின் ஆரோக்கியத்திற்காகவும், சுகாதார மேம்பாட்டிற்காகவும் அவர்களின் குடும்ப வாழ்வாதத்திற்காகவும் பல்வேறு துறைகளில் ஏராளமான திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.அதனடிப்படையில் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் , அரசின் சேவைகள், தேவையான சான்றிதழ்களை ஒரே இடத்தில் பெறவேண்டும் என்பதற்காக மாநில அளவில் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்திட உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் இம்முகாம்கள் நடத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சியிலும், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஆகிய 5 நகராட்சிகளிலும் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.சிவகாசி மாநகராட்சியில் 119 நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், 270 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், 26 பள்ளிப் பராமரிப்பு தூய்மைப் பணியாளர்கள், 86 தனியார் நிறுவன தூய்மைப் பணியாளர்கள், 28 கழிவு நீர் வாகன பணியாளர்கள், 18 திடக் கழிவு சேகரிப்பாளர்கள் என மொத்தம் 547 தூய்மைப் பணியாளர்களுக்கு காப்பீடு அட்டை, நலவாரிய அட்டை, வருவாய்த்துறை சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, வீட்டு வசதி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இம் முகாம்களில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் மூலம் பெறப்படும் சேவைகள், வங்கிகளின் மூலம் சுய தொழில் தொடங்க முதலீட்டுக் கடன் பெறுவதற்கும், ஆதி திராவிட வீட்டு வசதி மேம்பாட்டு கழகத்தின் மூலம் தூய்மைப் பணியாளர் உறுப்பினர் அட்டை பதிவு செய்வதற்கும், சமூக நலத்துறையின் மூலம் குடும்ப நல உதவி பெற்றிடவும், வருவாய்த் துறையின் மூலம் பல்வேறு சான்றிதழ்கள், மகளிர் திட்டத்தின் மூலம் சுய தொழில் கடன் திட்டத்திற்கும் விண்ணப்பிக்கும் வகையிலும், திடக் கழிவு சேகரிப்பாளர் பதிவு மற்றும் சரிபார்ப்பு, இயந்திரமாக்கப்பட்ட சுகாதார சூழல் அமைப்புக்கான தேசிய செயல்திட்டத்தின் (NAMASTE) கீழ் அடையாள அட்டை, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காப்பீடு, ஓய்வூதியம், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய சேவைகளுக்காகவும் பல்வேறு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
இம்முகாமினை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S.,சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், மாநகர நல அலுவலர் திருமதி ஸ்ரீதேவி, சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply