இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அழகாபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், இன்று (25.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்.தமிழக அரசு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு காலத்தில், தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இரத்த சோகை பாதிப்பை குறைப்பதற்கும், தாய்மார்களின் உடல்நிலையை சீராக மேம்படுத்துவதற்கும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
சுகாதாரத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் கர்ப்பிணித் தாய்மார்கள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு முறையான கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்தவும். முறையான பராமரிப்பை மேற்கொள்ள மருந்து மாத்திரைகளை உட்கொள்ள உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒவ்வொரு மாத இடைவெளியிலும் எடை வீதம் கணக்கெடுக்கப்பட்டு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை விகிதம் உள்ளிட்டவை கணக்கிடப்பட்டு வருகின்றன.கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை பாதிப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை கண்டறிந்து, தேவையான சிகிச்சையினை உரிய முறையில் மேற்கொண்டால் மட்டுமே ஆரோக்கியமான குழந்தை பிறப்பிற்கு வழிவகுக்கும்.
தமிழ்நாடு அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் மகப்பேறு காலத்தில் வருவாய் இழப்பைத் தடுக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுத்து தினந்தோறும் ஆரோக்கியமான ஊட்டப்பொருட்களை உட்கொள்ளவும், ரூ.18 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொது சுகாதாரத்துறை சார்பில், ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள • சத்து மாவு (Health Mix), இரும்புச்சத்து மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்களும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.மேலும், கர்ப்பிணித் தாய்மார்களின் ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டினை நிவர்த்த செய்திட, இன்றைய தினம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அத்தி பழம், கருப்பு உலர் திராட்சை, நிலக்கடலை, நெய், பேரிச்சம்பழம், கேப்பை மாவு மற்றும் சிகப்பு அவுல் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.
எனவே, கர்ப்பிணித் தாய்மார்கள் சுய மருத்துவம் மேற்கொள்ளாமல், தங்களின் உடல்நலத்தை தொடர்ந்து கண்காணித்து, தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல்கள் வழங்கி வரும், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில், ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய விழிப்புணர்வு கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்வின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) திருமதி பங்கஜம், மாவட்ட தாய் சேய் நல அலுவலர் திருமதி விஜயலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.ரூபன் ராஜ், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி தாரணி கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply