'மரமண்டை மனிதா'
நாம் வணங்கும் கடவுளை நாம் பார்க்க முடியாது. அளவிட முடியாத சக்தியாக எங்கும் நிறைந்திருக்கிறார் கடவுள். கண்கூடாக பார்க்கும் கடவுள் சூரியன். அதே போல் முற்காலத்தில் உருவ வழிபாடு இல்லாமல் முன்னோர்கள் எல்லாம் மரம், நீர், காற்று, மழை, நிலம், பசு இவைகளை தெய்வமாக வணங்கி வந்தனர். தன் நலமற்ற மரம் நமக்குக் கொடுக்கும் பொருள்களை அளவிடமுடியாது. உதாரணத்திற்கு தென்னை மரம் எடுத்துக் கொள்வோம். இம்மரத்தின் தென்னஞ்சருகு கிடுகு மேய, ஓலை பல் தேய்க்க, பூ திருமண வீட்டில் மங்களகரமாகவும், தேங்காய், மட்டை, இளநீர் ஏன் தான் காய்ந்து போனாலும் குடிசை வீட்டிற்கு நிலையாகவும், அதுவும் ரொம்ப நாள் ஆகிவிட்டால் எரிக்க என்று தான் அழிந்து போகும்வரை தன்னை தியாகம் செய்து கொண்டே இருக்கின்றது.
காட்டுப்பாதையில் மனிதர்கள் நடமாட்டம் “மரங்கள் ஜாக்கிரதை “. என்ற அளவிற்கு மரங்களை மனிதர்கள் சூரையாடுகின்றனர் . மரங்கள் அழுகின்றன, தன்னை வெட்டுவதை நினைத்து அல்ல, எதிர்கால சந்ததிகளை நினைத்து.
சந்தனமரத்தை வெட்டி சாய்த்தாலும் துக்கப்பட்டு மணம் வீசாமல் இருப்பதில்லை. அடர்ந்த காடுகள் நிறைந்த நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு இயற்கை வளம் மிகுந்து இருந்தது. சுதந்திரம் வாங்கிய பின்பு மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற இல்லாமல் சிந்தனையே காடுகளின் செல்வங்களை பணத்திற்காக சூறையாடிவிட்டனர். மரம் இல்லையேல் 'மழையில்லை' என்பதை நீண்ட இடைவெளிக்குப் பின் உண்மையிலியே உணர்ந்த பின்புதான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
பல வருடங்களாக மரம் வெட்டுவதை எதிர்க்கும் 'மண்டல்' கிராமத்தைச் சேர்ந்த மக்கள் 'சிப்கோ' (தழுவிக்கொள்) என்ற அமைப்பை 1973ம் ஆண்டு ஏற்படுத்தி உள்ளனர். மரங்களை வெட்ட யார் வந்தாலும் மரத்தைத் தழுவிக் கொண்டு யாரும் விடுவதில்லை. வெட்ட வருபவர்களும் திகைத்துப்போய் திரும்பிச் சென்றதால் கிட்டத்தட்ட 1 லட்சம் மரங்களை இவர்கள் பாதுகாத்துள்ளனர்."
நாம் இப்படி செய்யாமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்படுவதைவிட இனிமேலாவது திருமணநாள், பிறந்த நாள், பண்டிகை நாட்கள் முன்னோர்கள் திதிநாட்கள் ஆகிய நாட்களில் மரங்களை மலைகளிலோ, ஊரிலோ, காடுகளிலோ வைத்து மரம் நிறைந்த பொன் விளையும் பூமியாக நம் ஊரை நாம் மாற்ற அனைவரும் ஒன்று சேரலாமே!
தன்னலமற்ற தியாகிகளான மரங்களை - கடவுளாகப் போற்றி வணங்காவிட்டாலும், அதை மதித்து மரியாதை செய்யலாமே! இனிமேல் யாராவது மரமண்டை என்றால் வருத்தப்படக்கூடாது. நம்மை பிறர் நலனில் அக்கறை கொண்ட மரத்திற்கு ஒப்பிடுகின்றார்களே என்று சந்தோஷம்தான் படவேண்டும்.
0
Leave a Reply