'நஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டத்தின் கீழ் போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம் என்ற போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (27.10.2025) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், 'நஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டத்தின் கீழ் போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம் என்ற போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தொடங்கி வைத்தார்.மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் 'நஷா முக்த் பாரத் அபியான் (NMBA) திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கான பிரச்சாரத்தின் 5வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தேசிய நிகழ்வாக போதைப்பொருள் இல்லாத இந்தியாவிற்கான பிரச்சாரம் என்ற தலைப்பில் 01.10.2025 முதல் 31.10.2025 வரை நாடு முழுவதும் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழியும், போதைப்பொருள் பயன்பாடுகளினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு, போதையை ஒழிக்கும் பாதையை வளர்ப்போம், போதை வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு , காப்போம் நம் குழந்தைகளை - உருவாக்குவோம் போதைப்பொருட்கள் இல்லாத சமூகத்தை உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களுடனும், போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுய விபரங்கள் இன்றி புகார் செய்வதற்கு DRUG FREE TN அலைபேசி செயலி குறித்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், “நான் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன், போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்கும் அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்“ என்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மதன்குமார், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply