விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஒன்றியம் ஆமத்தூர் சங்குரெட்டியபட்டியில் உள்ள பள்ளியில் (10.07.2024) முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகளில் விரிவுபடுத்தப்படவுள்ளதை முன்னிட்டு துவக்க பள்ளியில் அடிப்படை வசதிகள், சமையல் கூடத்தில் பயன்படுத்தப்பட உள்ள உபகரணங்கள் மற்றும் பாத்திரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியம் திருவண்ணாமலை ஊராட்சியில் (10.07.2024) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (10.07.2024) அருப்புக்கோட்டை மினர்வா பப்ளிக் பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 77-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 77-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேரவேண்டும் என்பதை முடிவு செய்து விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து படிக்க வேண்டும். மேலும் நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மதிப்பெண்களை வழங்குகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.12-ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.12-ஆம்; வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
தாய்த் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் ”தமிழ்நாடு நாளாகக்” கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பெற்றது.இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு நாளையொட்டி மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 09.07.2024 ஆம் நாள் முற்பகலில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட நூலக அலுவலகத்தில் நடத்தப்பட்டன.கட்டுரைப் போட்டிகளுக்கு வீரார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு.மு.கூடலிங்கம், மலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திருமதி ப.ரேணுகாதேவி, விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு. ஞா. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர்.பேச்சுப்போட்டிகளுக்கு, இராசபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு.இரா.மாரியப்பன், நடுவப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திரு.வே.இராமர், ஆனைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திருமதி த.இ.முல்லைக்கொடி ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர். கட்டுரைப்போட்டியில் இராசபாளையம் கேசா டிமிர் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி நா.தியாஸ்ரீ முதல் பரிசாக ரூ.10000/-, சிவகாசி ஒய்.ஆர்.டி.வி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ந.ஜெயரதி காமாக் இரண்டாம் பரிசாக ரூ.7000/-, சிவகாசி, எஸ்.என்.எம். பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி இரா. தர்ஷா மூன்றாம் பரிசாக ரூ.5000/- வென்றனர்.பேச்சுப்போட்டியில் மம்சாபுரம் பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆ.முனீஸ்வரன் முதல் பரிசாக ரூ.10000/-, சிவகாசி ஒய்.ஆர்.டி.வி பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்.ஷேரன் பிரின்ஸஸ் லிடியா இரண்டாம் பரிசாக ரூ.7000/-, க.மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கா.கவிலன் மூன்றாம் பரிசாக ரூ.5000/- வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட நூலக அலுவலர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் வழங்கினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ம.சுசிலா அவர்கள் மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (09.07.2024) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப்பெண் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது குறித்தும் மற்றும் தமிழ் புதல்வர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் கல்லூரி முதல்வர்கள், கல்லூரி நோடல் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப. ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின்; சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் ஃ மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ஃ மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.அதன் விவரம் பின்வருமாறு,1. கல்வி உதவித்தொகை 10 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை.2. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1,00,000/-3. விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை ரூ.10,000/- முதல் ரூ.1,00,000/- வரை.4. இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20,000/-5. ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5,000/-6. திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3,000/- மற்றும் பெண்களுக்கு ரூ.5,000/-.7. மகப்பேறு உதவித்தொகை ரூ.6,000/- மற்றும் கருச்சிதைவு /கருக்கலைப்பு உதவித்தொகைரூ. 3,000/-8. கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500/-9. முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000/-மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தீவிர ஒழிப்புத் திட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்த 7 குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளிலும் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகளிலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கடந்த 01-01-2024 முதல் 29-06-2024 முடிய உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறையினரும் குழுவாக இணைந்து 448 முறை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளதா என சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கண்டறியப்பட்ட 178 கடைகள் மற்றும் 13 வாகனங்களில் 850 கிலோ 500 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 178 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. மேலும், 178 கடைகள் மற்றும் 13 வாகனங்களுக்கும்;; ரூ.42,60,000/- (ரூபாய் நாற்பத்து இரண்டு இலட்சத்து அறுபதாயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30-06-2024 முதல் 06-07-2024 முடிய ஒரு வாரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட 21 குழு ஆய்வுகளில் 14 கடைகள் மற்றும் 1 வாகனத்தில்; 39 கிலோ 282 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 14 கடைகள் சீல் வைக்கப்பட்டன. 14 கடைகள் மற்றும் 1 வாகனத்திற்கு ரூ.3,75000/- (ரூபாய் மூன்று இலட்சத்து எழுபத்தைந்தாயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக தடை செய்யப்பட்ட புகையிலை விற்பது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். 2-வது முறையாக தவறு செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் ஒரு மாதம் வரை கடை மூடி சீல் வைக்கப்படும் . 3வது முறையும் தவறு செய்தால் ரூ.1லட்சம் அபராதம், மூன்று மாதங்களுக்கு கடை மூடி சீல் வைக்கப்படும். இம்மாவட்டம் முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் இருப்பு வைப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு மாநில கிளையின் கீழ், விருதுநகர் மாவட்டத்;தில் செயல்பட்டு வந்த இந்திய செஞ்சிலுவை சங்கம் கடந்த 2018 முதல் பல்வேறு காரணங்களினால் அதன் செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது.தற்போது இக்கிளையின் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தவும், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே விருதுநகர் கிளை செஞ்சிலுவை சங்த்தின் முன்னாள் ஆயுட்கால உறுப்பினர்கள் யாரேனும் புதிய நிர்வாகிகள் தேர்வில் கலந்து கொள்ள விரும்பினால் விருதுநகர் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தை தொடர்வு கொள்ளவும்,மேலும் புதிய ஆயுட்கால உறுப்பினர்கள் சேர்க்கையும் நடைபெறுவதால் விருப்பமுள்ள தன்னார்வலர்கள் தங்களது சுய விபரங்களோடு விருதுநுகர் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தை நேரில் அணுகி விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 1029 நியாயவிலைக்கடைகளிலும், பொது விநியோகத்திட்ட குடும்ப அட்டைதாரர்கள் கடந்த 2024 ஜூன் மாதத்திற்குரிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஜூலை மாதம் முழுவதும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஜூன் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (09.07.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குருந்தமடம் ஊராட்சியில், பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.20 இலட்சம் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட உயர்மட்ட நீர் தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும்,குருந்தமடம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.14 இலட்சம் மதிப்பீட்டில், அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும்,பந்தல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், ரூ.1.10 இலட்சம் மதிப்பீட்டில், மேம்படுத்தப்பட்ட பள்ளி வகுப்பறை (SMART CLASS) அமைக்கப்பட்டுள்ள பணியினை ஆய்வு செய்து பின்னர், அங்கு பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், கல்வி தரம் குறித்து கேட்டறிந்தார்.பந்தல்குடி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.11 இலட்சம் மதிப்பீட்டில், வீரசின்னம்மாள் கோவிலுக்கு அருகில், கரை உயர்த்தப்பட்டு, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு வரும் பணியினையும் மற்றும் 100 நாள் வேலை திட்டம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்நிகழ்வின் போது, அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) திரு.ரவி, பொறியாளர்கள் திரு.பாண்டியராஜ், முருகன், வட்டாட்சியர் திரு.செந்தில்வேலன், மேற்பார்வையாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.