4-ஆவது விருதுநகர் புத்தகத் திருவிழா - 2025 நடைபெறுவதை முன்னிட்டு, “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட இலச்சினை(LOGO) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (29.10.2025) 4-ஆவது விருதுநகர் புத்தக திருவிழா, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் 14.11.2025 முதல் 24.11.2025 வரை 11 நாட்களுக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலச்சினையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தகவாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தினை ஊக்கப்படுத்த வேண்டும். புத்தகவாசிப்பினை ஒருமக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் புத்தகத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில், முதலாவது புத்தக திருவிழா கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய கருப்பொருளை மையப்படுத்தி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நான்காவது விருதுநகர் புத்தக திருவிழா - 2025 “அறிவும் வளமும்” என்ற தலைப்பில், விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் 14.11.2025 முதல் 24.11.2025 வரை 11 நாட்கள் நடத்தப்பட இருக்கிறது.இப்புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், தொல்லியல்துறை அரங்குகள், அறிவரங்கம், பசுமை அரங்குகள், புத்தக நன்கொடை அரங்கு, உணவு மற்றும் சிற்றுண்டி அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், பிரபல எழுத்தாளர்கள் மற்றும் தலைசிறந்த ஆளுமைகளின் சிறப்புரைகள், சிறப்புப் பட்டிமன்றங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதன்படி, இந்த புத்தகக் கண்காட்சி குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், “அறிவும் வளமும்” என்ற தலைப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில், இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் கண்டுகளித்து, புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களில் தாங்கள் விரும்புகின்ற புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறும், இந்த புத்தகத் திருவிழா குறித்து அனைத்துத் தரப்பினருக்கும் தகவல்களையும் கொண்டு செல்வதற்கும், போதுமான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி அனைவரும் பயன்பெறுவதற்கு போதிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
0
Leave a Reply