4 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 'சீரற்ற மயமாக்கல்' முறையில் ஒதுக்கீடு.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் துணை சீரற்ற மயமாக்கல் (Supplementary Randomization) முறையில் தெரிவு செய்யும் பணி, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் (14.04.2026) நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் அமைந்துள்ள 2,001 வாக்குச்சாவடிகளுக்கு ஏற்கனவே 2,396 வாக்குப்பதிவுக் கருவிகள் (BU), 2,396 கட்டுப்பாட்டுக் கருவிகள் (CU) மற்றும் 2,596 விவிபேட் (VVPAT) இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்தத் தொகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா உட்பட 16 பெயர்கள் மட்டுமே இடம்பெற முடியும். தற்போது மாவட்டத்தில் இராஜபாளையம் (22 வேட்பாளர்கள்), சாத்தூர் (22), அருப்புக்கோட்டை (25) மற்றும் திருச்சுழி (23) ஆகிய 4 தொகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அங்குள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதைக் கணக்கில்கொண்டு, 20 சதவீதக் கூடுதல் ஒதுக்கீட்டுடன் சேர்த்து பின்வருமாறு மிண்ணனு வாக்குபதிவு இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன:
202-இராஜபாளையம்* - 322 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
204-சாத்தூர்:*- 349 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
207-அருப்புக்கோட்டை*- 324 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
208-திருச்சுழி:*- 350 வாக்குப்பதிவு இயந்திரங்கள்
என மொத்தம் *1,345* வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை சீரற்ற மயமாக்கல் முறையில் இன்று முறைப்படி தெரிவு செய்யப்பட்டன.
முன்னதாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் கூடுதலாக இருந்த 907 இயந்திரங்களுடன், மதுரை மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட 600 இயந்திரங்கள் என மொத்தம் 1,507 இயந்திரங்கள் முதல்நிலைச் சரிபார்ப்பு (FLC) செய்யப்பட்டுத் தயார் நிலையில் இருந்தன.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு. சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு. சீனிவாசன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply