தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வாயிலாக நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் (11.10.2025) நடத்தப்பட்ட கிராமசபைக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டதைத் தொடர்ந்து, காரியாபட்டி வட்டம் கல்குறிச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், கிராம மக்களின் 3 அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராமசபை ஒப்புதல் பெறுதல், சாதிப்பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயரை மாற்றுதல் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல் (01.04.2025 முதல் 30.09.2025 முடிய), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், சபாசார் செயலி செயல்பாடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, தூய்மை பாரத இயக்க (ஊரக) திட்டம், தொழிலாளர் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறத் திறன் பயிற்சித் திட்டம், இதர பொருட்கள் தொடர்பான கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இக்கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மூன்று அத்தியாவசியமான தேவைகளை அவர்களிடம் பெற்று உடனடியாக மாவட்ட அளவில் முடிக்க வேண்டிய பணிகளை இவ்விடத்திலேயே முடிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, நம்முடைய கல்குறிச்சி ஊராட்சியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு 7- வகையான பணிகள் சுமார் ரூ.41 இலட்சத்தில் முடிக்கப்பட்டு உள்ளது.தற்போது, 2025-2026-ல் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் 15 வீடுகள் சுமார் ரூ.68 இலட்சம் மதிப்பிலும், மற்ற 18 வகையான பணிகள் சுமார் ரூ.50 இலட்சம் மதிப்பிலும் என மொத்தமாக 1.8 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.2024-2025-யில் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் 3-வீடுகளும், பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் ஒரு வீடும், இதர 12 பணிகள் ரூ.79 இலட்சத்திலும் என மொத்தமாக ரூ.1.36 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்றுள்ளன. இதுபோன்று, 450 கிராம ஊராட்சிகளிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம்கள் மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.349 முகாம்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏறத்தாழ 285 முகாம்கள் முடிக்கப்பட்டு அவற்றில் 60,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அம்மனுக்களில் 70 சதவீதம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சேவைகள் அனைத்தும் மக்களை சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று, மற்றொரு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் பல்நோக்கு சிறப்பு மருத்துவர்கள் களத்திற்கே சென்று பொதுமக்களுக்கு இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றனர். பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு பட்டா, வங்கிக் கடன் தேவைப்படுவோருக்கு வங்கி கடன் உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் உடனடியாக வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், இக்கூட்டத்தில் இன்று விண்ணப்பம் அளித்த 14 நபர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அவர்களின் தேவைகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தற்போது பூர்த்தி செய்ய உள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என தெரிவித்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிக்கு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.முருகானந்தம், உதவி இயக்குநர்(தணிக்கை) திரு.முருகன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, காரியாபட்டி வருவாய் வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply