காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், ரூ.2.75 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தினை (04.07.2025) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட வேளாண்மை - உழவர் நலத்துறையின் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பயிறு வகை தொகுப்பு, பழச்செடி தொகுப்பு, காய்கறி விதை தொகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து வழங்கும் விளைப்பொருட்களின் உற்பத்தியினை அதிகரித்து ஊட்டச்சத்துப் பாதுகாப்பினை உறுதி செய்திட, உழவர்களின் வருமானத்தை அதிகரித்திட தமிழ்நாடு அரசு மூலம் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்னும் புதிய திட்டம் 2025-26-ம் நிதியாண்டில் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் 2025-26 திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 25 தொகுப்புகள் வீதம் மொத்தம் 275 தொகுப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் மரத்துவரை, காராமணி மற்றும் அவரை வகை விதைத் தொகுப்புகளும் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்க தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற ஆறு வகையான காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பும், பப்பாளி, கொய்யா, எலுமிச்சை ஆகிய மூன்று வகையான பழச்செடிகள் அடங்கிய தொகுப்பும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற உழவர் செயலியில் பதிவேற்றம் செய்யும், tnhorticulture.tn.gov.in வலைதளத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமையில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் வேளாண்மை இயந்திரமாக்குதல் உப இயக்கம்-2025-2026 திட்டத்தின் கீழ் பவர் டில்லர் 50 சதவீதம் மானியத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர்(பொ) திருமதி நாச்சியார் அம்மாள், செயற்பொறியாளர் திருமதி இந்திரா, உதவி இயக்குநர்கள், அரசு அலுவலர்கள், விவசாயிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply