தேசிய அறிவியல் தின சிறப்பு நிகழ்ச்சியானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் கே.வி.எஸ் ஆங்கில பள்ளியில் (28.02.2025) மாவட்ட நிர்வாகம் மற்றும் LMES அகாடமி இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பரிசோதனைகள் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அறிவியல் தின சிறப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தொடங்கி வைத்து, உரையாற்றினார்.அறிவியல் என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. நாம் எந்த ஒன்றையும்; அறிவியல் பார்வையோடும், மனப்பாங்கோடும் பார்க்க வேண்டும். இதனை திருவள்ளுவர்
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று குறிப்பிடுகிறார்.
இதில் மெய்ப்பொருள் என்பதற்கு பதிலாக அறிவியலின் படி காண்பது தான் அறிவு என்று அன்றே திருவள்ளுவர் அறிவியல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.நாம் அனைவரும் அறிவியல் மனப்பாங்கோடு இருப்பது தான் உண்மையான அறிவு. எனவே, மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் அறிவியல் அறிவையும், அறிவியல் மனப்பாங்கையும் ஒருங்கிணைத்து பெற வேண்டும்.எனவே, ஆசிரியர்கள் அனைவரும் இது போன்ற அறிவியல் நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், பெர்னொல்லியின் துப்பாக்கி, மிதக்கும் பந்து, கிரேக்க உபசாரத் தட்டு, தர்பூசணி வெடிப்பு, துளி நைட்ரஜன் தெளிப்பு, பியூட்டேன் மற்றும் அசிட்டோன் வாயு ராக்கெட், காற்று பெரிய துப்பாக்கி, யானை பேஸ்ட் பரிசோதனை உள்ளிட்ட அறிவியல் பரிசோதனைகள் மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்தில் இருந்தும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1000 மாணவ, மாணவியர்கள், 120 அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply