விருதுநகர் மாவட்டம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25 கீழ் சூரிய ஒளியில் இயங்கும் மின்வேலி அமைக்கும் திட்டத்தில் 22 விவசாயிகள் மானியம் பெற்று பயன்பெற்றுள்ளனர்
விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் 2024-25 கீழ் சூரிய ஒளியில் இயங்கும் மின்வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விவசாய நிலங்களில் வன விலங்குகளால் பயிர் சேதம் அதிகரித்து வருகிறது. விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி மகசூல் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு அதிக அளவு இழப்பு ஏற்பட்டு பொருளாதாரம் பாதிப்பு அடைகிறது.விவசாய நிலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தினை தடுப்பதற்கு வேளாண்மை பொறியியல் துறையின் கீழ், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் சூரிய ஒளியில் இயங்கும் மின் வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சூரியசக்தியால் இயங்கும் சுற்றுவட்டப் பாதுகாப்பு மின்வேலி அமைப்பதன் மூலம், விலங்குகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். ஒரு விலங்கு வேலியைத் தொட நேரிட்டால் அதற்கு லேசான அதிர்வு ஏற்படும். ஆனால் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு மின்சாரம் தாக்காது இதன் காரணமாக விலங்குக்கு வேலியிடப்பட்டுள்ள இடத்திற்கு மீண்டும் வருவதைத் தவிர்க்கும் மனநிலை உருவாகும், இதனால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதே இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.இத்திட்டத்தில், மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு சூரிய மின்வேலி 50 சதவிகித மானியத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2021-2022 - ஆம் ஆண்டில் 5 விவசாயிகள் ரூ.5,21,000/- மானியத்திலும்,
2022-2023 - ஆம் ஆண்டில் 15 விவசாயிகள் ரூ.14,72,000/- மானியத்திலும்,
2024-2025 - ஆம் ஆண்டில் 22 விவசாயிகள் ரூ.26,54,000/- மானியத்திலும் பயன்பெற்றுள்ளனர்.
அதன்படி, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, ரூ.1,12,160/- மானியம் பெற்று, சூரிய ஒளியில் இயங்கும் மின்வேலி அமைத்து பயன்பெற்று வரும் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் அ.புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள திரு.வைரமுத்து என்பவரின் நிலத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, இத்திட்டத்தின் பயன்கள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்தார்.இத்திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மின்வேலி மூலம் எங்களது பயிறுகள் வனவிலங்குகள் சேதப்படுத்துவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறது எனவும், இதனால் பொருளாதார இழப்பு இல்லாமல், நல்ல முறையில் மகசூல் கிடைக்கிறது எனவும், சூரிய மின்வேலி என்பதால் மின்சார செலவும் மிச்சமாகிறது எனவும், இதை அமைப்பதற்கு அரசு மானியம் வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது எனவும் பயனாளி தெரிவித்தார்.இந்த நிகழ்வில், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திருமதி இந்திரா, உதவி செயற்பொறியாளர் திரு.ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply