வேளாண் துறை சார்பில் "விளைநிலம் காப்போம் இயக்கம்" விழிப்புணர்வு முகாம்.
ஒன்றிய அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், *"விளைநிலம் காப்போம் இயக்கம்" (கேத் பச்சாவோ அபியான் - Khet Bachao Abhiyan)* விழிப்புணர்வு முகாம் ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம ஊராட்சிகளிலும் (Gram Panchayats) நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S, , அவர்கள் தெரிவித்துள்ளார்.
இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு விபரங்கள்:
இந்த விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ், வேளாண் துறை அலுவலர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் மூலம் விவசாயிகளுக்குப் பின்வரும் அத்தியாவசியத் தொழில்நுட்பத் தகவல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன:
மண் ஆரோக்கியம் மற்றும் நுண்ணூட்ட மேலாண்மை:
மண்வள அட்டை (Soil Health Card) பரிந்துரைப்படி, தேவைக்கேற்ப நேரடி உரங்கள், உயிர் உரங்கள், நானோ உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களைப் பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
சமச்சீர் உரப் பயன்பாடு:
அதிகப்படியான இரசாயன உரப் பயன்பாட்டைத் தவிர்த்து, சமச்சீர் உரமிடுதல் மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களைப் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.
இயற்கை விவசாய நன்மைகள்:
இயற்கை மற்றும் கரிம உரப் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், களச் செயல்விளக்கங்கள் (Field Demonstrations) மற்றும் கிராம அளவிலான சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் விபரங்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்படும்.
நிலையான வேளாண்மை:
சாகுபடி செலவினைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனை அதிகரித்தல் மற்றும் நிலையான விவசாய முறைகளைக் கையாளுதல் போன்ற தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம்:
பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், சமையல் எண்ணெய் பயன்பாட்டினை 10% வரை குறைப்பது உள்ளிட்ட ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளும் இந்த "விளைநிலம் காப்போம் இயக்க" விழிப்புணர்வு முகாமில் பெருந்திரளாகப் பங்கேற்று, தங்களது விளைநிலத்தின் ஆரோக்கியத்தையும், தங்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
0
Leave a Reply