வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், கோதைநாச்சியார்புரம், விஜயகரிசல்குளம், துலுக்கன்குறிச்சி, சங்கரபாண்டியபுரம், இ.ராமநாதபுரம் ஆகிய ஊராட்சிகளில் பல்வேறு அரசுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I AS., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, சாத்தூர் வட்டம் படந்தாலில் பள்ளி மாணவியர்களுக்கான சமூக நீதி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரம், குடிநீர் வசதி, சுகாதார வசதிகள், தங்கும் அறைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கல்வி, உடல்நலம் மற்றும் விடுதி தொடர்பான தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், வெளிநோயாளிகள் பிரிவு, மருந்தகம், மகப்பேறு பிரிவு, ஆய்வகம், தடுப்பூசி சேமிப்பு வசதிகள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தாயில்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு தரமான மற்றும் விரைவான சிகிச்சை வழங்கப்படுவதை உறுதி செய்யவும், மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைக்கவும், மருத்துவ உபகரணங்கள் முறையாக பராமரிக்கப்படவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சுகாதார நிலைய வளாகத்தை தூய்மையாக பராமரித்து, பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி மருத்துவ சேவைகளைப் பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார். தொடர்ந்து, பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
கோதைநாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், சுகாதாரமான முறையில் உணவு தயாரித்தல், உணவு பட்டியலின்படி உணவு வழங்கப்படுகிறதா, மாணவர்களின் வருகைப் பதிவு மற்றும் திட்டத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றையும்,விஜயகரிசல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டடங்களையும்,சங்கரபாண்டியபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் புதிய அங்கன்வாடி மைய கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து, கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், கட்டிடத்தின் தரம், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கட்டுமானப் பணிகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இராமநாதபுரத்தில் புதிய களம் அமைக்கும் பணியினையும், சாத்தூர் வட்டத்தில் சுகாதார நிதி 2023-2024ன் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினையும், குருலிங்காபுரத்தில் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 ன் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக் கடையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்நிகழ்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply