கத்திரிக்காய் செடி அதிகமாக காய்க்க...
வீட்டு தோட்டம் வைத்திருப்பவர்கள் அனைவருமே வைக்க வேண்டிய முக்கியமான செடியாக இந்த கத்திரிக்காயை சொல்லலாம். ஒரே ஒரு கத்திரிக்காய் செடியாவது வீட்டில் வளர்த்தால் நம்முடைய தேவைக்கு கடைகளில் வாங்காமல் பயன்படுத்திக் கொள்ளலாம். கத்திரிக்காய் விதைகளை நாம் நடவு செய்வதற்கு முன்பாக விதைகளை உரத்தில் ஊற வைக்க வேண்டும். உங்களிடம் உரம் ஏதும் கைவசம் இல்லை என்றால், மோரை நன்றாக புளிக்க வைத்து அதில் விதைகளை ஒரு மணி நேரம் வரை ஊற விட்டு அதன் பிறகு எடுத்து நடவு செய்யும் போது செடிகள் நன்றாக வளர ஆரம்பிக்கும்.
இந்த கத்திரிக்காய் செடியானது வளர அதிக இடம் தேவைப்படும். எனவே அதை சுற்றிக் பரவலாக இடமிருந்தால் நன்றாக படர்ந்து வளரும். அதே சமயம் கத்திரிக்காய் செடியில் இலைகள் அதிகம் இருந்தாலும் காய்கள் அதிகம் வைக்காது. இதில் பழுத்த இலைகள் அல்லது தேவையில்லாமல் செடியின் அடிப்பகுதியில் இருக்கும் இலைகளை எல்லாம் அவ்வப்போது நாம் எடுத்து விட வேண்டும். இதன் மூலம் சத்துக்கள் வீணாகாமல் அதிகமாக காய் வைக்கும். அதே போல கத்திரிக்காய் செடிகளை ஓரளவிற்கு வெயில் படும் இடத்தில் வைத்தாலே நல்ல விளைச்சலை பார்க்க முடியும். அடுத்து இந்த செடிகளுக்கு உரமாக நம் வீட்டு கிச்சன் கழிவுகளை கம்போஸ்டாக மாற்றி கொடுக்கலாம். இத்துடன் மீன் அமிலம் சேர்த்து கொடுக்கும் பொழுது செடிகள் நன்றாக செழித்து வளரும். இவையெல்லாம் கொடுத்த பிறகும் செடியில் பூ வைத்து பூக்கள் உதிர்ந்தால் வாரம் ஒரு முறை பஞ்ச காவ்வியா தெளிக்கலாம். இதை செய்தாலும் வைக்கும் பூக்கள் அனைத்துமே கண்டிப்பாக உதிராமல் காய் வைக்கும்.
இந்த உரங்கள் ஏதும் உங்களிடம் இல்லை என்றால், கத்திரிக்காய் செடிகளுக்கு செலவே இல்லாத ஒரு அற்புதமான சத்து நிறைந்த உரத்தை நாமே தயார் செய்து விடலாம். அதற்கு புங்க மரத்து பூக்கள் அல்லது விதை இரண்டில் எது கிடைத்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இவைகளை நன்றாக நிழலில் காய வைத்து எடுத்து பவுடர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் ஒரு முறை செடிகளின் வேர்ப்பகுதியில் இந்த பொடியை தூவி மூடி விடுங்கள் போதும். இந்த உரத்தை தொடர்ந்து கொடுத்து வரும் பொழுது கத்திரிக்காய் செடி மரம் போல வளர்ந்து பெரிய பெரிய இலைகளுடன் அதிகமான பூ வைத்து கொத்து கொத்தாக காய்க்க தொடங்கி விடும்.கத்தரிக்காய் செடிகளை அதிக அளவு வைத்து வளர்ப்பவர்கள் இந்த செடிகளுக்கு அருகில் சாமந்தி செடியை வளர்த்தால் அந்தச் செடிகளின் மூலம் தேனீக்கள் அதிகமாக வந்து மகரந்த சேர்க்கை நடைபெறும். இதன் மூலம் பூக்கள் ஒன்று கூட உதிராமல் அனைத்துமே காய்க்கும்.
0
Leave a Reply