தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தினை அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் (09.01.2026) உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தினை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அரசு மருத்துவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.ஆர்.மாதவன் அவர்கள் முன்னிலையில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தினை தொடங்கி வைத்து உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் தன்னார்வலர்களுக்கு கைப்பேசி இணைப்புகள் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான அடையாள அட்டை, தொப்பி, கனவு அட்டை அடங்கிய தொகுப்பினை வழங்கி பணிகளைத் தொடங்கி வைத்தார்கள்.
உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் உரிய பயிற்சி வழங்கப்பட்ட 50,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் தமிழ்நாட்டில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சுமார் 1.91 கோடி குடும்பங்களை நேரடியாக அவர்களின் இல்லங்களுக்கே சென்று சந்தித்து, பல்வேறு அரசுத்துறை நலத்திட்டங்களின் தற்போதைய நிலை, திட்டங்களில் செயல்திறன் மற்றும் தாக்கம், மக்களின் பூர்த்தி செய்யப்படாத தேவைகள், மக்களின் வளர்ந்து வரும் முன்னுரிமைகளை கண்டறிதல் உள்ளிட்ட 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை பொதுமக்களிடம் வழங்குவர்.
தன்னார்வலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். இணைக்கப்பட்டுள்ள அவ்விண்ணப்பத்துடன் அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து TNeGA மூலம் வடிவமைக்கப்பட்ட கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும். திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும். மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறிந்து பொதுமக்களுக்கான எதிர்காலத்திட்டங்களை செயல்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 5,42,842 குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று தன்னார்வலர்கள் மூலம் உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணிகளில், மகளிர் திட்ட தன்னார்வலர்கள், இல்லம் தேடிக்கல்வித் திட்ட தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்களை ஊக்குவிப்போர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட 1500 பணியாளர்களும், ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த 588 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 2,088 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.எனவே, பொதுமக்கள் அனைவரும் உங்கள் கனவைச் சொல்லுங்கள் திட்டத்தின் கீழ் நடைபெறக்கூடிய இந்த கணக்கெடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி இந்த திட்டம் வெற்றியடைவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புர வாழ்வாதார இயக்கம்) திரு.வீ.கேசவதாசன் அவர்கள், உதவி திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply