முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்கள் வரவேற்பு.
விருதுநகர் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ், 2026-27 ஆம் நிதியாண்டிற்குப் புதியதாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000/- மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000/- வீதம் இரண்டு குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.50,000/- வைப்புத்தொகை இரசீது வழங்கப்படும். அதேபோல், மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், ஒரு குழந்தைக்கு ரூ.25,000/- வீதம் மூன்று பெண் குழந்தைகளுக்கு மொத்தம் ரூ.75,000/- வைப்புத்தொகை இரசீதாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர், முதிர்வுத் தொகையைப் பெறுவதற்கு அக்குழந்தையின் வைப்புத்தொகை இரசீது நகல், 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரை அணுகலாம்.
இ-சேவை மையங்களின் மூலம் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களாவன:
குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், தாய் அல்லது தந்தையின் வயதுச் சான்றிதழ், ஆண்டு வருமானச் சான்றிதழ் (ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும்), குடும்பக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ், ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் உரிய அடையாள அட்டை நகல் ஆகியவையாகும்.
இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, "மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626002" என்ற முகவரியிலோ அல்லது 04562-252701 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply