கொருக்காம்பட்டி கிராமத்திலிருந்து இராஜபாளையத்திற்கு புதிய பேருந்து சேவை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கொருக்காம்பட்டி கிராமத்திலிருந்து இராஜபாளையம் வழித்தடத்திற்கான புதிய பேருந்து சேவையினை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் (13.08.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அருகிலுள்ள நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் கொருக்காம்பட்டி கிராமத்திலிருந்து இராஜபாளையம் செல்லும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.இந்த புதிய பேருந்து சேவை மூலம் கொருக்காம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இராஜபாளையம் மற்றும் வழித்தடத்தில் உள்ள பகுதிகளுக்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த பேருந்து சேவை பெரிதும் பயனளிக்கும். மாணவர்கள் உரிய நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவும், பணியாளர்கள் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும் இந்த பேருந்து சேவை உதவிகரமாக அமையும்.மேலும், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக இராஜபாளையம் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு பயண நேரத்தையும் சிரமத்தையும் குறைத்து, எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும்.
புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டதன் மூலம் கொருக்காம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்டநாள் போக்குவரத்து தேவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், கிராமப்புற மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இச்சேவை உறுதுணையாக அமையும். மேலும் இந்த பேருந்து சேவை மூலம் இப்பகுதியில் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வழிவகை செய்யும்.
எனவே, இந்த புதிய பேருந்து சேவையினை இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த பேருந்து சேவை வழங்கிய தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply