சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அந்ததந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் 11.06.2025 அன்று நடைபெறும் .
கடந்த ஆண்டைப்போல விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 12 முகாம்கள் வீதம் மொத்தம் 132 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் காளப்பெருமாள்பட்டி கிராமத்தில் 11.06.2025 அன்று காலை 8.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் முகாம் துவக்கி வைக்கப்படவுள்ளது.
இந்த முகாம் நடைபெறும் இடம், தேதி, கலந்துகொள்ளும் மருத்துவக்குழுவினர் ஆகிய விவரங்கள் முன்கூட்டியே அந்த ஊராட்சி பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். நிகழ்வு தொடர்பாக துண்டுபிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நாளில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் முகாம்கள் நடைபெறும்.
அப்பொழுது கால்நடை மருந்தகத்தில் செய்யப்படும் சேவைகளான சிகிச்சை, குடற்புழுநீக்கம், ஆண்மைநீக்கம், மலடுநீக்க சிகிச்சை, தடுப்பூசிப்பணி, KCC விண்ணப்பங்கள் பெறுதல் ஆகிய பணிகள் அந்தந்த ஊராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும். அனைத்து பணிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. கலந்துகொள்ளும் கால்நடைகளுக்கு இலவசமாக தாது உப்பு கலவை ஒரு கிலோ எடையுள்ள சத்து பவுடர் ஒவ்வோர் முகாம்களிலும் வழங்கப்படும். கால்நடை வளர்ப்போருக்குத் தேவையான தீவனபுல் விதைகள் மற்றும் நாற்றுகளை விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
எனவே முகாம்கள் நடைபெறும்பொழுது அப்பகுதி கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் விலங்கின ஆர்வலர்கள் கலந்துகொண்டு தங்கள் கால்நடைகளை அழைத்துவந்து பயன்பெற்றுச் செல்லுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply