தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற , கட்டுமானத் தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சூலக்கரை, அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (22.09.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற, கட்டுமானத் தொழிலாளர்களுக்கான 7 நாட்கள் திறன் பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தொடங்கி வைத்தார். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் 09.04.2025 அன்று கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தொழில் சார்ந்த நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளித்து அவர்களின் திறனை மேம்படுத்த, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, கட்டுமான வேலை, கம்பி வளைப்பு வேலை, தச்சு வேலை, மின்பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட 11 கட்டுமான தொழில் இனங்களில், 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊதியத்துடன், 50,000 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூபாய் 45 கோடியே 21 இலட்சம் செலவில் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அரசாணை வெளியிடப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மேற்குறிப்பிட்ட 11 தொழிற்பிரிவுகளின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.மேலும், மஸ்தூர் தொழிற்பிரிவில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் 11 தொழிற்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பயிற்சி பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 11 தொழிற்பிரிவுகளில் பதிவு செய்துள்ள 1100 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சி வழங்கிட சூலக்கரை அரசு தொழிற்பயிற்சி நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக கொத்தனார் தொழிற்பிரிவில் விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு 7 நாட்கள் திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து வரும் வாரங்களில் இதர தொழிற்பிரிவு இனங்களில் பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு வேலை இழப்பீட்டுத் தொகை நாள் ஒன்றிற்கு ரூ.800/- வழங்கப்படும். 7 நாட்களுக்கான வேலை இழப்பீட்டுத் தொகை ரூ. 5600/- பயிற்சி நிறைவடைந்த மறுநாள் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவடைந்தவுடன் பயிற்சியில் கலந்து கொண்ட தொழிலாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே, விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் மேற்கண்ட 12 பிரிவுகளில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் திறன் பயிற்சிக்கான விண்ணப்பத்தினை பெற்று நலவாரிய அட்டை நகல், வங்கி கணக்கு முதல் பக்கம் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கடவுச்சீட்டு புகைப்படத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) திரு.ஜெ.காளிதாஸ், விருதுநகர், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.ஆ.செல்லக்கனி மற்றும் உதவி இயக்குநர், (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) திரு.மகேஸ் சுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள, பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply