100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விருதுநகரில் 7 நடமாடும் மின்னணு விழிப்புணர்வு வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை 100% நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் SVEEP (Systematic Voters' Education and Electoral Participation) திட்டத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒன்று வீதம், அதிநவீன LED திரைகளுடன் கூடிய 7 மின்னணு விழிப்புணர்வு வாகனங்களின் சேவையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S.,அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனங்கள் விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், திருச்சுழி, ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) மற்றும் ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
மின்னணு திரை மூலம் தகவல்கள்: வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள LED திரைகள் மூலம் வாக்களிப்பதன் அவசியம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கம், சரியான முறையில் வாக்களிக்கும் முறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலிகளான cVIGIL, 1950 உதவி எண் குறித்த குறும்படங்கள் மற்றும் விழிப்புணர்வு பாடல்கள் ஒளிபரப்பப்படும்.
சின்னம் 'விரு': விழிப்புணர்வு விளம்பரங்களில் 'விரு' (Viru) என்ற அணில் உருவம் கொண்ட சின்னம் வாக்காளர்களைக் கவரும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக முன்னிறுத்தப்பட்டுள்ளது.
*வாக்குப்பதிவு நாள் - ஏப்ரல் 23: வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், "எங்கள் வாக்கு - எங்கள் குரல்" (Our Vote - Our Voice) என்ற முழக்கத்தோடு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதே இந்த வாகனப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்வின் போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், "ஜனநாயகத் திருவிழாவில் ஒவ்வொரு வாக்காளரின் பங்கேற்பும் மிக முக்கியமானது. எவ்வித ஆசை வார்த்தைகளுக்கும் இடமளிக்காமல், நேர்மையான முறையில் வாக்களித்து 100% வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்ட விருதுநகர் மாவட்ட மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply